Monday 7 April 2008

நான் கடவுள் இல்லை




மரணத்தின் விளிம்பில் நின்று
நீ யாசிக்கும் சில உயிர்த்துளிகள்
வரமளிக்க நான் கடவுள் இல்லை..


மரணித்துக்கொண்டிருக்கும் உன் நரம்புகளை
குருதி பாய்ச்சி உயிர்பிக்க முயலும்
உன் இருதயத்திற்கு தெரியுமா -
அதன் துடிப்புகள் எண்ணப் படுகின்றன


உன் நாசிக்கும் வாய்க்கும் இடையே
சிக்கி மெலிந்துக் கொண்டிருக்கும்
சுவாசத்திற்கு தெரியுமா-
இந்த கூடு அதற்கினி சொந்தமில்லை


மங்கிக் கொண்டிருக்கும் உன் பார்வையில்
தோன்றி மறையும் ஒவ்வொரு
நம்பிக்கை கீற்றும்
என்னை குத்திப் பாய்கிறது


உன் நரம்பில் புகுத்தப்படும் மருந்துகளும்,
உனக்காக செய்யப்படும் செயற்கை சுவாசமும்,
உன் பிரிவை மேற்பார்வையிடும்
என் வலியைக் குறைக்கத்தான்

காத்திருக்கும் உன் சொந்தங்களுக்கு
செய்திச் சொல்ல காத்திருக்கும்
மரணத்தின் தூதனாகவே
நான் இப்பொழுதில்

உன் நாடி துடிப்புகள் ஓங்கி அடங்கி
அய்யோ என்ற அழுகை வெடிக்கும் போது
எங்கேனும் ஒளிந்து கதற வேண்டும் நான்
நான் கடவுள் இல்லை, இல்லவே இல்லை