Monday 30 June 2008

தமிழ் தாய் வாழ்த்து


நீராருங் கடல் உடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ் பரத கண்டமிதில்

தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே!

அத் திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற,
எத் திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
தமிழணங்கே!

நின் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே


"மனோன்மணீயம்" பெ. சுந்தரம் பிள்ளை

குடும்ப வன்முறை ?

ஒரு புதிதாக மணமான இளம் பெண் .ரத்த பரிசோதனை செய்ததில் ரத்த சோகை
இருப்பது தெரிந்தது .உணவுகளால் மட்டுமே சரி பண்ணக் கூடிய அளவில் இருந்ததனால் என்னென்ன உட்கொண்டால் இந்த சோகை குறையும் என்று
சொல்லி அனுப்பினேன் .இரண்டு வாரம் சென்று மீண்டும் வர வேண்டும் என்றும் கூறினேன் .

இரண்டு வாரம் சென்றது ,மூன்று வாரம் சென்றது இந்தப் பெண் வரவில்லை ....
அவளை அறிந்தவர்களிடம் கேட்ட போது ஒரு பெண் சொன்னார் ,'அடப் போங்கம்மா !நீங்க பாட்டுக்கு பொறிகடலை சாப்பிடு ன்னு சொல்லி அனுப்பிட்டீங்க ,அந்தப் பிள்ளை ரெண்டு ரூவாய்க்கு கடலை வாங்கப் போக ,மாமியாக்காரி தெருவுலப் போட்டு அடிக்கிறா ,அழுதுக்கிட்டே
கெடந்தது பாவம் .'

மாமியார் கொடுமை என்று கூறினாலும் ,இதே மாமியார் இந்த பெண்ணை
பரிசோதனைக்கு அழைத்து வரவும் ,பரிசோதனைகள் செய்ய செலவழிக்கவும்
யோசிக்கவில்லை .அவள் பிரியப்பட்டதை அவளாகவே வாங்கி சாப்பிட்டாள் என்பதே அவரின் கோபம் ,அதை தன் மகன் வாங்கிக் கொடுத்தும் தான் .

Saturday 28 June 2008

இயலாமை

கடமலைக் குண்டு ,


என் மருத்துவப் பணியில் ஒரு விழிப்புணர்வு தந்த இடம் .பெரிய மருத்துவமனைகளையும் அதன் அலங்காரங்களையும் அறியாத, அவற்றை நெருங்க முடியாத நோயாளிகளின் தேவைகளை நான் உணர்ந்தது இங்கு தான் .


ஒரு மூதாட்டி -வயது அறுபது தாண்டியிருக்கும் --
தலை சுற்றுகிறது என்று சொல்லி வந்தார் ,சர்க்கரையின் அளவோ 400 உணவு பற்றி சொல்லும் போது சொன்னேன் ,அரிசி உணவுகளில் மாவுச் சத்து அதிகமாக இருப்பதால் கோதுமை போன்ற பிற தானியங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள் .அவர் கூறினார் ,'அரிசி கிலோ 4 ரூ விக்குது ,
கோதுமையும் கேழ்விரகும் கிலோ 8ரூ விக்குது ,நா வாங்கும் 40ரூ கூலியிலே சோறு தின்னா கட்டுமா ?கோதும தின்னா கட்டுமா ?'


இதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கையில் தானம் கட்டளையின் நிறுவனர் திரு.வாசிமலை கூறினார் , இவர்கள் பழக்கங்களுக்கு ஏற்றவாறு உணவு வகைகளை இவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் ,(ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது)அதை விட சிறப்பான வழி, இவர்கள் அளவிலான வசதிகளுடன்
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருப்பவர்கள் உடன் இவர்களை உரையாடச் செய்து அவர்கள் பின்பற்றும் உணவுகளை இவர்களும் பின்பற்றச் செய்யலாம் என்று.




Friday 27 June 2008

அறியாமை ?????????????

ஒரு முறை இரு முறை அல்ல நான் பல முறை கண்டது இது .பெண்கள் வயதை சொல்ல பிரியப் படமாட்டார்கள் ,சொல்ல மாட்டார்கள் ,குறைத்து சொல்வார்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறோம் ,ஆனால் வயதே தெரியாமல் இருக்க முடியுமா ?
இன்னும் நம் கிராமங்களில் வாழும் பல பெண்கள் வயது ஒரு தோராயமான அளவு தான் .
பலருக்கு முப்பதை தாண்டி சொல்லவே தெரியாது ...
இன்னும் சிலர் மாமியார் (?)அல்லது கணவனைக் கேட்டே சொல்வார்கள் ...
இவர்களாவது பரவாயில்லை சிலர் நம்மையே கேட்பார்கள் ........


ஒரு பாட்டி என்னிடம் சொன்னார் 'நீ என் பேத்தி மாதிரி ,உனக்கு என்ன தோணுதோ ?அதையே போட்டுக்கோ ??'


வேடிக்கையாய் தோன்றினாலும் இவர்கள் அறியாமையை என்னவென்று சொல்வது ?
இவர்கள் வயதை தெரிந்து வைத்திருக்கும் அளவிலான அறிவுடைமை கூட
இவர்களுக்கு மறுக்கப் பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும் .

Thursday 26 June 2008

அறியாமை ??????????????

நான் மருத்துவம் இறுதியாண்டு படிக்கும் பொது நிகழ்ந்தது இது .ஐம்பத்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ,மார்பக புற்று நோய் சிகிச்சைக்காக சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் .
மார்பகம் அரித்துப் போய் ,புண்ணாகி ,சீழ் வடிந்து ,புழுக்கள் வைத்து பார்க்கவே அத்துணை அருவருப்பாக இருந்தது .துர்நாற்றம் வேறு .

பல கேள்விகள் இன்று நினைக்கும் போதும் என் மனதில் தோன்றும்
இது உடனடி சிகிச்சை தேவைப் படும் விஷயம் கூடவா அத்தனை நாள் தெரியாமல் போயிருக்கும் ?
கூட இருந்தவர்கள் இதை கவனியாமல் விட்டது எப்படி ?
புழுக்கள் சேரும் வரை அந்த வேதனையை அவர் எவ்வாறு பொறுத்துக் கொண்டிருந்தார் ?
நான் பார்த்து இது போன்ற ஓரிருவரை ,இது போல் எத்தனையோ பேர் மருத்துவமனைகளை தொடாமல் மடிந்து கொண்டிருக்கிறார்கள் .