Tuesday 30 December 2008

தமிழா ,நீ பேசுவது தமிழா ?

தமிழா!நீ பேசுவது தமிழா?
தமிழா!நீ பேசுவது தமிழா?


அன்னையைத் தமிழ்வாயால்'மம்மி' என்றழைத்தாய்...
அழகுக் குழந்தையை'பேபி' என்றழைத்தாய்...
என்னடா, தந்தையை 'டாடி' என்றழைத்தாய்...
இன்னுயிர்த் தமிழைகொன்று தொலைத்தாய்...


தமிழா!நீபேசுவது தமிழா?


உறவை 'லவ்' என்றாய்உதவாத சேர்க்கை...
'ஒய்ப்' என்றாய் மனைவியைபார் உன்றன் போக்கை...
இரவை 'நைட்' என்றாய்விடியாதுன்வாழ்க்கை
இனிப்பை 'ஸ்வீட்' என்றாய்அறுத்தெறி நாக்கை...


தமிழா!நீ பேசுவது தமிழா?


வண்டிக்காரன் கேட்டான்'லெப்ட்டா? ரைட்டா?
'வழக்கறிஞன் கேட்டான்என்ன தம்பி 'பைட்டா?
'துண்டுக்காரன் கேட்டான்கூட்டம் 'லேட்டா?
'தொலையாதா தமிழ் இப்படிக் கேட்டா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


கொண்ட நண்பனை'பிரண்டு' என்பதா?
கோலத் தமிழ்மொழியைஆங்கிலம் தின்பதா?
கண்டவனை எல்லாம்'சார்' என்று சொல்வதா?
கண்முன் உன் தாய்மொழிசாவது நல்லதா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


பாட்டன் கையில'வாக்கிங் ஸ்டிக்கா
'பாட்டி உதட்டுலஎன்ன 'லிப்ஸ்டிக்கா?
'வீட்டில பெண்ணின்தலையில் 'ரிப்பனா?
'வெள்ளைக்காரன்தான்உனக்கு அப்பனா?


தமிழா!நீ பேசுவது தமிழா?


-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்

Friday 26 December 2008

என் கோலங்கள்



நான் முதல் முதலில் கோலம் போட பழகியது திருநெல்வேலியில் .ஆச்சி வீட்டில் விடுமுறையில் பக்கத்து வீட்டு மீனா அக்கா சொல்லி கொடுத்த சாக்லேட் கோலம் தான் நான் போட்ட முதல் கோலம் .இதன் பின்னர் கிளி ,மயில் என்று படி படியாக முன்னேறி அதில் தேர்ந்தது தனி கதை .


என் பெரியப்பா வீடு சென்னை ராயப்புரத்தில் இருந்தது .இங்கிருந்த குறுகலான தெருக்களில் கோலம் போட நடக்கும் அடி தடிகளை சிறு வயதில் நான் பார்த்ததுண்டு .பெரிய கோலம் போட இடம் கிடைக்காமல் போய் விடும் என்று இரவிலேயே கோலம் போடுவார்கள் .இதில் சண்டை வேறு .எங்கள் வீட்டருகே விசாலமாக இடம் இருந்தது ,கோலம் போடும் ஆர்வம் தான் பலருக்கும் இல்லை .


நான் பள்ளி படித்துக் கொண்டிருந்த போது மார்கழி என்றாலே கோல நோட்டுக்களின் ராஜாங்கம் தான் பள்ளியில் .எல்லோரும் அவரவருக்கு தெரிந்த கோலங்களை பகிர்வது வழக்கம் .இதில் என் தோழி மீனா ,புள்ளிகளுக்குள் சொந்தமாக கோலம் போடுவதில் வல்லவள் .அவள் கண்டுபிடித்த கோலங்கள் இன்றும் என்னிடம் உண்டு .ஆசிரியர் ஒரு பக்கம் பாடம் நடத்திக் கொண்டிருக்க மறைவாக நோட்டை ஒளித்து வைத்து கோலம் போட்ட காலங்கள் அவை .


வீட்டில் மாலை நேரங்கள் முழுவதும் மறு நாள் காலை போடப் போகும் கோலங்களுக்கான ஒத்திகை நடக்கும் . காலையில் ஐந்து மணிக்கு எழுந்து(இப்போதும் இது எனக்கு எப்படி முடிந்தது என்பது ஆச்சரியம் தான் ) நோட்டும் கையுமாக கிளம்பி ,முந்தின நாள் கோலத்தை பல முறை மீண்டும் ரசித்த பின்னர் அரை மனதுடன் அதில் தண்ணீர் தெளித்து, கோலத்தை ஆரம்பித்து ஏழு மணிக்கு முடித்து ...முடித்த பின் ஒவ்வொரு பக்கமாக அதை நின்று அழகு பார்த்து என்று நாள் பூராவும் கோலத்தை சார்ந்தே நகரும் . ஒரு முறை நான் உட்கார்ந்து கொண்டு கோலம் போடுவதை பார்த்த என் பாட்டி கோபித்து ,நின்று தான் கோலம் போட வேண்டும் என்றார்கள் .அன்றிலிருந்து அதையும் பழகி கொண்டேன்.


இதில் அவ்வப்போது என் கோலத்தை பிரமிப்பாக பார்த்து நகரும் பக்கத்து வீட்டு கிருஷ்ணவேணி (இன்றும் பண்டிகைகளில் நான் போடும் கோலங்களுக்கு முதல் ரசிகை) ,எதிர்த்த வீட்டு மோகனா ,பாப்பம்மாள் (எல்லோரும் பணி பெண்கள் ) இவர்கள் எல்லாரும் அன்றைய கோலத்தை பார்த்து விட்டார்களா என்ற அலசல் வேறு . இதெல்லாம் என் பள்ளி காலத்தில் .

அப்புறம் கல்லூரி காலங்களில் பண்டிகை விஷேஷங்களில் மட்டுமே கோலம் போடுவது என்றாகி போனது .இதில் ஒரு பொங்கல் நாளில் நான் போட்ட கோலத்தை என் பக்கத்து வீட்டிற்கு வந்திருந்த வெளிநாட்டு தம்பதியர் சுத்தி சுத்தி வந்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மறக்க முடியாதது. இதை எதை வைத்து போடுகிறீர்கள் ,இது எப்படி தரையில் ஒட்டுகிறது ,எப்படி அழியாமல் இருக்கிறது என்று கேள்விகள் வேறு .


திருமணத்திற்கு பின் ,என் மாமியார் வீடு மூன்றாவது மாடியில் ,வாசலில் கோலம் போட இடமே கிடையாது .இதற்கு பின் என் அம்மா வீட்டிற்கு சென்னைக்கு வரும் போது மட்டுமே கோலம் போடுவேன் .இதில் ஒரு முறை அம்மா நான் வேறு எங்கோ வெளியில் சென்ற நேரம் பணி பெண்ணை வைத்து கோலம் போட்டு விட ,பெரிய சண்டையே போட்டேன் .கோலம் போட கிடைத்த ஒரே வாய்ப்பும் நழுவியதே என்று .அதோடு ,"ஏம்மா ,நீ போடலையா ?"என்ற கிருஷ்ணவேணியின் விசாரிப்பும் என்னை வருத்தப்படுத்தியது .


இப்போது நான் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் வாசல் என்பது ஏதோ பேருக்கு வீட்டுக்கு முன்னால் இருக்கும் இடம் .பல நாட்கள் ,"இதற்கு கோலம் வேறு தேவையா" என்று கோலம் போடாமல் விட்டு விட்டேன் .இப்போது தான் போடாமலேயே விட்டு விட்டால் மறந்து விடுமே என்று அஞ்சி சில மாதங்களாக சின்ன சின்ன கோலங்களாக போட ஆரம்பித்திருக்கிறேன் ( பழக்கம் விட்டு போய் போன வருடம் பொங்கலுக்கு நான் போட்ட கோலத்தில் இருந்த பெண்ணை பார்த்து என் சின்ன மகன் "அம்மா வாசலிலே பேய் வரைஞ்சிருக்காங்க "என்று சொல்லி என் மனதை உடைத்தது தனி கதை)


வாசலெங்கும் கோலங்களாக பூத்திருக்கும் இந்த மார்கழி நேரத்தில் என் கோலங்கள் நினைவு சுழல்களாக என் மனதில் சுழன்று கொண்டே இருக்கின்றன .

Friday 12 December 2008

இன்றும்

இன்றும் ஒரு நாளில்
பூக்கும் என் சிரிப்பைஎல்லாம்
அரும்புகளாகவே கிள்ளி எறிகிறாய்


என் வாசல்வரை வந்த வசந்தங்களை
கதவிடுக்குகள் வழியே
விரட்டியடிக்கிறாய்


மகிழ்ச்சிகள் துளிர்த்த போதெல்லாம்
வெந்நீர் ஊற்றி அவற்றை
வேக விடுகிறாய்



தப்பி சிதறிய என் முகவரிகள்
சிலவற்றையேனும்
தீயிட்டு அழிக்கிறாய்


எஞ்சிப் போன சில வெற்றுத் தாள்களில்
மீண்டும் மீண்டும் எழுத முயன்று
உயிர் வலித்துப் போகிற நான் .........


காட்டாறாய் உருமாறிஅணை உடைக்கும் போது
நீயும் தொலைந்து போவாயென
இன்றும் அமைதியாய்.....

Thursday 11 December 2008

தமிழுக்கும் அமுதென்று பேர்


தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!