Tuesday 22 December 2009

கைராசி

"அந்த டாக்டர் கை பட்டவுடனே எனக்கு சரியாயிடும் ","அந்த ஆஸ்பத்திரியில கால் மிதிச்சவுடனே என் கொழந்த சுகமாயிரும் "மருத்துவர்களை பெரிதும் ஆட்டி வைக்கும் கைராசி குறித்த கருத்துகள் இவை .


இங்கே குடும்ப மருத்துவர் என்று எடுத்துக் கொண்டால் அவரின் வெற்றியை தீர்மானிப்பது பெரும்பாலும் அவரின் கைராசி தான் . மருத்துவ கல்லூரியில் சுமாராக படித்தவர்கள் பலர் நடைமுறையில் பெரிய வெற்றி பெறுவதும் ,மெத்தப் படித்து பதக்கம் வாங்கியவர்கள் சுமாரான வெற்றி பெறுவதும் இதனால் பல நேரம் நடக்கிறது .


ஒரு மருத்துவர் மேல் அவரிடம் சிகிச்சைக்கு வருபவர் கொண்டிருக்கும் நம்பிக்கையை காட்டுகிறது இந்த கைராசி என்னும் செண்டிமெண்ட் .ஒருவேளை,ஆதரவாக பேசிப் பழகும் மருத்துவர்களை கைராசி நிறைந்தவர்களாக மக்கள் நினைக்கிறார்களோ என்று நினைத்தால் எனக்கு தெரிந்த ஒரு பிரபல ராசியான மருத்துவர் "ம்","சரி " என்ற இரு சொற்களை (?) மட்டுமே அதிகமாக பயன்படுத்தக் கூடியவர்.ஒருவேளை ,நிறைய பட்டங்கள் வாங்குவதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்று பார்த்தால் ,பட்டம் எதுவுமே வாங்காத ஆர்.எம்.பி டாக்டர்களுக்கு பிராக்டிஸ் அள்ளிக் கொண்டு போகிறது .மருத்துவரின் புறத் தோற்றம் இதற்கு காரணமாக இருக்குமோ என்று யோசித்தால் அதுவும் ஒரு சரியான காரணமாக தெரியவில்லை .


ஒருவேளை நிஜமாகவே இதில் ஏதும் ராசி இருக்கிறதோ என்று பார்த்தால் ,சிலருக்கு ராசியாக இருக்கும் மருத்துவர் வேறு சிலருக்கு ராசியற்றவராக இருக்கிறார் .இது குறிப்பாக மகப்பேறு நல மருத்துவர்களுக்கு அதிகம் பொருந்தும் .ஒரு ,குடும்பத்திற்கு அந்த மருத்துவரிடம் சென்றால் கண்டிப்பாக சுகப்பிரசவம் ஆகும் இல்லை தாங்கள் நினைக்கும் (பல நேரங்களில் ஆண் குழந்தை ) குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை இருக்கும் .இன்னொரு குடும்பம் (அதே மருத்துவருக்கு அடுத்த வீட்டில் இருந்தால் கூட ) அங்கே போனால் கண்டிப்பாக சிசேரியன் தான் என்று சொல்லி அந்த பக்கமே போக மாட்டார்கள் .


பிறர் சொல்லக் கேட்டு இந்த கைராசி என்பது வாய்வழி செய்தியாகப் பரவி ஒரு மருத்துவரின் வெற்றியை நிர்ணயம் செய்கிறது .இதன் காரணமாக ஒரு மருத்துவர் கைராசியானவராக அறியப்படுவது அவசியமாகிறது .ஆனால் இதை சாத்தியமாக்குவதோ பெரிய மந்திர வித்தையாக இருக்கிறது .சிலருக்கு எந்த முயற்சியும் இல்லாமலே நிறைவேறுகிறது சிலருக்கு எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் வெறும் கனவாகவே இருந்து போகிறது


எது எப்படியோ, பக்தர்களுக்கு கடவுள் மேல் இருக்கும் பக்தி போல, இப்படி ஒரு நம்பிக்கை பற்றுதலோடு இந்த வர்த்தக யுகத்திலேயும் மக்கள் மருத்துவர்களை மதிக்கிறார்கள் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான் .


6 comments:

அண்ணாமலையான் said...

ஆம் . உண்மைதான்..

தமிழ் உதயம் said...

அதாவது டாக்டர்களும் நடிக்க வேண்டும் போலும். நடிகர்கள் எல்லாம் டாக்டர்கள் பட்டம் வாங்கும் போது, டாக்டர்கள் கொஞ்சம் நடிகர்களாக வேண்டியது தானே.

saravan said...

neengal solvathu mutrilum unmai...
doctorkal anbaga pesinale pathi noi kunamaki vidum..

திருவாரூர் சரவணா said...

கை ராசின்னுங்குறது எல்லாம் நம்பிக்கைதான்.

கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்து செய்யாததை இரு சில நேரம் மருத்துவரின் நம்பிக்கை தரும் அன்பான வார்த்தைகள் செய்துவிடலாம். மருத்துவரின் இரண்டு முகங்கள் பற்றி இளையபாரத்தில் இடுகை இட்டிருக்கிறேன். நேரம் இருந்தால் படிக்கவும்.

http://writer-saran.blogspot.com/2009/12/blog-post_3644.html

Kavinaya said...

முகராசி, magnetic personality, சிலரைப் பார்த்ததும் பிடித்து விடுதல், இதெல்லாம் வாழ்வில் பல நிலைகளில் பார்க்கிறோம். ஆனால் நீங்கள் சொல்வது போல் மருத்துவத் துறையை கைராசி அதிகம் பாதிப்பது உண்மைதான்.

பூங்குழலி said...

கை ராசின்னுங்குறது எல்லாம் நம்பிக்கைதான்.

ரொம்ப சரியா சொன்னீங்க சரண் ..இந்த நம்பிக்கை இல்லாம மருத்துவர் கிட்ட போனா ,சரியான மருந்தா இருந்தா கூட நோய் சரியாகாது சில பேருக்கு


மருத்துவத் துறையை கைராசி அதிகம் பாதிப்பது உண்மைதான்

ஆமாம் கவிநயா ,கைராசி இல்லைன்னு பேராகிட்டா பொழைப்பே கஷ்டம் தான்