Tuesday 2 February 2010

அழகாக

நேற்று வந்த ஒரு கணவன் மனைவி .எப்போதாவது ஒரு முறை தான் இந்த கணவருக்கு மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து வர நேரம் கிடைக்கும் .இவர் அழைத்து வராவிட்டால் வழி தெரியாது என்று இவர் மனைவியும் சரியாக சிகிச்சைக்கு வருவதில்லை .ஆனால் வரும் போதெல்லாம் நான் என் மனைவியை எப்படி தாங்குகிறேன் என்பதை பற்றிய பிரதாபம் அதிகம் இருக்கும் ."நான் ஜூஸ் போட்டுக் கொடுத்தேன் "."நான் பழம் வாங்கிக் கொடுத்தேன் .""அவங்க தான் அழுது உடம்பைக் கெடுத்துக்குராங்க".இப்படியே பேசிக் கொண்டிருப்பார் .

இவர்களின் மகள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாள்,திருமணம் ஆன சில மாதங்களிலேயே .தீக்காயங்களுடன் இருந்த மகளுக்கு தொட்டு எதுவும் செய்ய வேண்டாம் ,உங்களுக்கு அவளுக்கு இருக்கும் நோய் வரலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்லியும் ,மகளுக்கு சிகிச்சை செய்தததில் இவருக்கு எச்.ஐ.வி வந்தது .கணவருக்கு இல்லை ."செத்தப்பக்கூட தொட்டு அழக் கூடாதுன்னு டாக்டர் சொன்னாரு ,எப்படிங்க எம்பிள்ளைய தொடாம இருக்க முடியும் ?"என்று சொல்லி அழுவார்.

மகளை நினைத்து அழுது கொண்டே இருப்பதாக கணவர் அங்கலாய்ப்பார் .நேற்று வந்தவர் ,"வரவர இவ அழகு கொறையுது .மொகம் ஒரு களையா இல்ல .ஒடம்பு வேற கொஞ்சம் மெலியிற மாதிரி இருக்கு .நா ஒப்பனா சொல்றேன் டாக்டர் .இவ செத்தாலும் கூட எனக்கு கவலயில்ல ,ஆன இவ சாகுற வரைக்கும் அழகா இருக்கணும் ,அதுதான் முக்கியம் .அதுபடி நீங்க பாத்துக்கோங்க ."

"மொதல்ல நீங்க அவங்கள ஆஸ்பத்திரிக்கு ஒழுங்கா கூட்டிட்டு வாங்க .அழகாக தான் இருக்காங்க (நிஜமாகவே அழகாக களையாக இருப்பார் ) எனக்கு தெரிஞ்ச வரைக்கும் .இதுக்கு மேல அழகாக தெரியணும்ன்னு சொல்றீங்க ,அப்ப நீங்க இங்க கூட்டிட்டு வரக் கூடாது ,பியூட்டி பார்லருக்கு தான் அவங்கள கூட்டிட்டு போகணும் .ஒரு பேசியல் பண்ணி முடிய வெட்டி விட்டு ஜீன்ஸ் போட்டுவிட்டா இன்னுமே அழகாக இருப்பாங்க .சினிமாவில இல்ல சீரியலில கூட நீங்க நடிக்க வைக்கலாம் ,"என்று சொன்னேன் கோபமாக .

"அவர் தப்ப எப்பவுமே ஒத்துக்க மாட்டாரு .என்னையே கொற சொல்வாரு "என்று
வருத்தமாக சொல்லிவிட்டு சென்றார் அவர் .


5 comments:

sathishsangkavi.blogspot.com said...

அழகாக...

அழகாக இருக்கிறது...

அண்ணாமலையான் said...

சுவாரஸ்யமா இருக்கு

Anonymous said...

அவருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆனால் உங்கள் எழுத்துக்கள் சம்பவத்தை என் முன்னிறுத்தியது...

Anonymous said...
This comment has been removed by the author.
பூங்குழலி said...

நன்றி சங்கவி ,அண்ணாமலையான் ,இந்திராகிசரவணன்