Tuesday 9 March 2010

பிறந்தநாள்

ஒரு அம்மா மகன் .மாதந்தோறும் சிகிச்சைக்கு சரியாக வரும் இவர் தன் மகனை மட்டும் சரியாக அழைத்து வருவதில்லை .அதிகம் வற்புறுத்தி சொன்னால் வருடம் ஒரு முறை அழைத்து வருவார் .சரியான சிகிச்சையும் கொடுப்பதில்லை .எந்த ஒரு பரீட்சையும் அவனுக்கு செய்வதில்லை .இது உதாசீனம் என்றாலும் மகனை அழைத்து வந்தால் அவனுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பயமே முக்கிய காரணம் .


ஒரு வழியாக போன வாரத்தில் இவனை அழைத்து வந்தார் .ரத்த சோதனைக்காக ,வயதை கேட்கையில் (பார்மில் நிரப்ப வேண்டும் ) ,பதிமூணு முடிஞ்சி பதினாலு ஆரம்பிக்க போகுது என்று சொன்னான் அவன் .சொல்வதைப் பார்த்தால் பிறந்தநாள் நெருக்கத்தில் இருக்குமோ என ,உனக்கு என்னைக்கு பிறந்தநாள் ?என்று கேட்டேன் ."எனக்கு தெரியாது" என்றான்."எங்கம்மா சொன்னதே இல்ல . இதுவரைக்கும் எனக்கு கருத்து தெரிஞ்சு எனக்கு எங்கம்மா பெறந்தநாள் கொண்டாடுனதே இல்ல .நா கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாங்க .நா பெறந்தப்ப கொடுத்த ஆஸ்பத்திரி சீட்டெல்லாம் வீட்டில இருக்கு .அதையும் என்னைய பாக்க விடமாட்டேங்குறாங்க .அவங்களும் பாத்து சொல்ல மாட்டேங்குறாங்க .டேய், அத தொடாதடான்னு சத்தம் போடுறாங்க . ஆஸ்பத்திருக்கு என்னைய கூட்டிட்டு போங்கன்னு சொல்றேன் ,அதெல்லாம் முடியாது ,பக்கத்திலே பாத்துக்கிரலாம் ன்னு சொல்றாங்க .பக்கத்துல பாத்து ஊசி போட்டா எனக்கு சீக்கிரம் நல்லாவே ஆக மாட்டேங்குது ,"என்றான் மிக வருத்தமாய் .இத்தனையையும் அவன் அம்மா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் எந்த ஒரு சலனமும் இல்லாமல் .


நோய் இருப்பது குழந்தைகளுக்கு தெரிந்து விடுமோ என்ற பயம் பெற்றோரை பலவாறாக ஆட்டி வைக்கிறது .ஆனால் அதற்கென மருத்துவமனைக்கு வராமல் ஒளித்து வைப்பது எதற்கும் தீர்வில்லை என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள் .சற்று விவரம் தெரிந்த குழந்தைகள் தங்களை சுற்றி ஏதோ மர்மம் இருப்பதாக குழம்பிப் போகிறார்கள் .இப்படி அவர்களின் மருத்துவ அறிக்கைகளை ஒளித்து வைப்பது, இன்னமும் அவர்களின் குழப்பத்தை அதிகப்படுத்துகின்றது .குழந்தையிடம் உரிய காலத்தில் பக்குவமாக உண்மையை எடுத்து சொல்வது மட்டுமே இதற்கு உறுதியான தீர்வாக முடியும் .


No comments: