Saturday 3 July 2010

மாநாடு முடிஞ்சி போச்சு

மாநாடும் முடிஞ்சி போச்சி
வந்த சனம் கலஞ்சி போச்சி
ஊரெல்லாம் வெறிச்சுன்னு தான்
வெறுங்காடா மாறிப்போச்சு

வானம் முட்டும் பந்தலென்ன
கண்ண கட்டும் லைட்டும் என்ன
பாட்டென்ன வேட்டென்ன
பவுசான பேச்சென்ன

கும்மிக்கு ஒரு கூட்டம்
கோலாட்டம் ஒரு கூட்டம்
சொகுசாத்தான் பேசிப் போக
சொகம்கண்ட கூட்டமொண்ணு

எவரெவரோ வந்தாக
எங்கிருந்தோ வந்தாக
வட கண்ட எலி போல
விரும்பித் தான் வந்தாக

வடக்கிலிருந்து வந்தாக
தெக்கு சீமைக்காரர் வந்தாக
அட வெள்ளையும் சொள்ளையுமா
தொரமாரு வந்தாக

கொலுவிருக்கும் சாமியெல்லாம்
தெருவேறி வந்தாக
பட்டுத்துணி சரசரக்க
பவுசாதான் வந்தாக

பேர் சொல்ல வாழ்ந்தவுக
தெருவோட போகையில
கிலோமீட்டர் நீள மேடையிலே
ஒரு குடும்பமாக வந்தாக

பாடி பதவி பெற
புலவரெல்லாம் வந்தாக
எழுத கை கூசுதய்யா
எத எதையோ சொன்னாக

கொழஞ்சித்தான் பேசினாக
குனிஞ்சித்தான் நடந்தாக
தமிழ் வளக்க ஆசயினு
தர பாத்து சொன்னாக

மினிக்கித்தான் திரிஞ்சவுக
மிதிபட்டு வலிச்சாலும்
அம்மான்னு கத்தாம
அய்யான்னே அழுதாங்க

இவுக ஆடிய ஆட்டத்தில்
தமிழ் வளந்து போச்சுதய்யா
ராக்கெட்டுல போனாப்புல
சிலர் மெதப்பேறிப் போச்சுதய்யா

பட்டணத்து பலகையிலே
தமிழ் மணம் தான் வீசுதையா
கோயமுத்தூர் சீமையிலே
குப்ப தமிழ் பேசுதையா

தமிழ்த்தாயி மேலெல்லாம்
வெறுந் தகடு மின்னுதய்யா
அவ காதில தான் வச்ச பூவு
கொண்ட வர மணக்குதையா


2 comments:

எஸ்.கே said...

அருமையான பாடல்!

பூங்குழலி said...

மிக்க நன்றி எஸ்.கே