Tuesday 16 November 2010

ஏடாகூடம்

குழந்தைகளின் கடத்தலும் இரண்டு குழந்தைகளின் கொலையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த நேரத்தில் என் மகனின் பள்ளியில் பத்து முதல் பன்னிரண்டாம் வகுப்பில் நடந்த சில நிகழ்வுகள் இவை .....

பல குழந்தைகள் பள்ளிக்கு செல்போனுடன் வருகிறார்கள் .பள்ளியில் இதற்கு அனுமதி இல்லையென்றாலும் இவர்கள் பெரும்பாலும் பெற்றோரின் அனுமதியுடனே இதை கொண்டு வருகிறார்கள்;வகுப்புகளுக்கு இடையே பாடல் கேட்பதற்கும் பிரவுஸ் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படுகிறது.இவற்றில் பல லேட்டஸ்ட் மாடல் விலை உயர்ந்த போன்கள்.இது போதாதென்று ஆசிரியர்களும் கூட வகுப்பின் ஊடே செல் போனில் பேசுகிறார்கள் .இது தவிரவும் ஐ பாட்,கேம்ஸ் சி டி போன்றவை சகஜமாக வகுப்பறைக்கு கொண்டுவரப்படுகின்றன .

ஸ்கூட்டியில் வருவதை அனுமதிக்காதீர்கள் ,அவ்வாறு வருபவர்கள் பள்ளியில் முன் அனுமதி பெற வேண்டும் என்றெல்லாம் விதிமுறைகள் இருந்தும் பல பிள்ளைகள் ஸ்கூட்டியில் வருகிறார்கள் .வீடு திரும்பும் போது மூவராக வண்டியில் வேகமாக பயணிப்பது சகஜமாக நடக்கிறது .

இன்னமும் சில பிள்ளைகள் வீடு திரும்பும் போது தானாகவே தெருவில் செல்லும் ஆட்டோக்களை நிறுத்தி ,பேரம் பேசி தனியே ஏறிச் செல்கிறார்கள் .

ஒரு மாணவனின் பெற்றோர் அமெரிக்காவில் இருக்கிறார்கள் .இங்கு தாத்தா பாட்டியிடம் வளரும் அவன் ,தினம் கொண்டு வரும் பாக்கெட் மணி ,சில நூறுகள் .இன்னொருவன் ,பள்ளிக்கு வந்ததும் அம்மாவுக்கு போன் செய்ய ,டிரைவர் கே எப்சியில் சிக்கன் வாங்கிக் கொண்டு வந்து வகுப்பில் கொடுக்கிறார் .

வார இறுதிகளில் ஒரு மாணவன் ,தன் நண்பர்களுக்கு அருகிலிருக்கும் காபி ஷாப்பில் கொடுக்கும் ட்ரீட்டில் செலவழிபவை சில ஆயிரங்கள் ..

தீபாவளிக்கு அடுத்த நாள் கலர் டிரசில் வரலாம் என்று சொன்ன போது சாதாரண உடையில் வகுப்பிற்கு வந்தானாம் கவுன்சிலரின் மகன் .இங்கு வந்து தன் அப்பாவிற்கு போன் செய்ததும் அவர் கொண்டு வந்து தந்தவை ,பட்டு வேட்டி சட்டை மட்டுமல்ல சுமார் இருபது பவுனில் ஒரு செயின் ,விலை நாலரை லட்சம் என்ற அறிவிப்போடு ..

இதையெல்லாம் தூக்கி சாப்பிடுவது போல் ,ஒரு பிரபல அரசியல் கட்சியின் முக்கிய புள்ளியின் மகன் எல் கே ஜி யில் பள்ளிக்கு கொண்டு வந்தது ஒரு பிச்சுவா கத்தி .பள்ளியில் பதறிப் போய் பெற்றோரை அழைத்து விசாரித்ததில் ,"எங்கள் மகனை தைரியசாலியாக வளர்க்க விரும்புகிறோம் ,இதையெல்லாம் கண்டித்து அவனை பயந்தாங்கொள்ளியாக மாற்றி விடாதீர்கள் "என்று சொன்னதோடு ,அவனை வேறு பள்ளிக்கும் மாற்றி விட்டார்கள் ....





Friday 12 November 2010

அம்மாவின் சரவெடி

நேற்றைய ஹாட் நியூஸ் அம்மாவின் பேட்டி தான் ...காங்கிரசுக்கு ஆதரவு என்று திரியை அவர் கொளுத்தி போட, டைம்ஸ் நவ் அதை விதவிதமாக விவாதித்தது .

ராசாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது தான் அவருடைய முக்கிய நிபந்தனையாம் .அமைச்சரவையில் கூட இடம் வேண்டாமாம் !ஆச்சரியம் தான் .காங்கிரசிற்கு வந்த வாழ்வு ....

பதினெட்டு எம் பிக்களின் ஆதரவை தானும் தர முடியுமாம் .ஆனாலும் "a bird in hand is worth two in a bush " இல்லையா ?

தேசிய அரசியலிலும் நாட்டின் நலன் மீதும் அவருக்குள்ள அக்கறையைப் பற்றியும் விரிவாகவே பேசினார் .பதிமூன்றே நாட்களில் வாஜ்பாயியின் அரசை கவிழ்த்த போது இந்த அக்கறையெல்லாம் எங்கிருந்ததோ தெரியவில்லை .

கடந்த காலத்தில் அவருக்கும் காங்கிரசிற்கும் நடந்த கசப்பான (இவருடன் உறவாடிய எல்லா கட்சியினருக்கும் ஏற்பட்ட மாதிரியே ஆன ) அனுபவங்களை மறந்துவிட வேண்டுகோள் விடுத்தார் .

ராசாவை அகற்ற தி மு க விற்கு விருப்பம் இருப்பதாக தெரியவில்லை .இத்தனை பெரிய ஊழலில் அவர் ஒருத்தர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்க சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது .இவரை அகற்றினால் ,கட்சியிலும் ஏன் மத்தியிலும் உள்ள சில பெரிய தலைகள் சங்கடத்திற்கு உள்ளாகலாம் .காங்கிரசும் இதை பற்றி பெரிதாக கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை .ஒருவேளை பத்திரிக்கைகள் எழுதுவது போல பீஹார் தேர்தல் முடிவுகளை பொறுத்து இது அமையுமோ என்னவோ ?

ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் போது அவரை மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக்கியதே தவறு .அதிலும் அவரை இன்னமும் அமைச்சராக நீடிக்க விடுவது என்ன நியாயமோ ?அவரும் வெட்கமின்றி ஆணவமாக அமைச்சராக தொடர்கிறார் ?

இந்த பேட்டியின் டைமிங் ரொம்பவே சரியானது .ஆனால் இதனால் என்ன பலன் இருக்குமோ தெரியவில்லை .கட்சியின் மூத்த தலைவர்களே அவசரத்திற்கு பார்க்க முடியாத ,எவரும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத ,கட்சி அலுவலகத்திற்கே மேள தாளத்தோடு வருகிற ஒரே தலைவர் செல்வி.ஜெயலலிதா தான் .இவர் நம்ப முடியாதவர் என்பதை இவரின் பல கடந்த கால நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றன .

அலங்காரமான மண் குதிரையை வேடிக்கை பார்க்கலாம் ,வழிபடலாம்,ஆனால் அதில் ஏறிக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கலாமா என்ன ?