Thursday 10 February 2011

தேர்தல் ஸ்பெஷல் -1



மகராணி போல நானும்
ஊர் மெச்ச வாழ்ந்திருந்தேன்
மந்திரிங்க துதிபாட
ஆரவாரமாய் தானிருந்தேன்

எந்த கொள்ளி கண்ணு பட்டோ
கத மாறிப் போச்சுதிங்கே
தலையில் உதிர்ந்த முடிகூட
ஓடித்தான் போச்சுதங்கே

அறிக்கை எழுதி படிச்சாலும்
பகல் பொழுதே போகலியே
சி எம் மா இல்லாம
கண் உறக்கம் போதலையே


போயசு தோட்டத்தில
பல நாளு தூக்கமில்ல
பையனூறு போய் படுத்தா
கண் உறக்கம் கொள்ளவில்ல

கொடநாடு போனதில
உச்சி மண்ட குளுந்து போச்சு
கண்ண மூடி உறங்கையில
வெளி ஒலகம் மறந்து போச்சு

அட கண் முழிச்சு பாக்கையில
வருஷம் நாலு ஓடி போச்சு
பொசுக்குன்னுதான் அல போல
ஊர் நெலம மாறிப் போச்சு

லட்ச்சமாம் கோடியாம்
லட்ச்சத்தில கோடியாம்
தெருக்கோடி காணா கேடிஎல்லாம்
கோடியில பொரளுறாங்க

சுடுக்காட்டில் சில கோடி
தங்கமா சில கோடி
ஆயிரம் கூட தேறலையே
மனசும் தான் ஆறலையே

எங்க போயி வெசனப்பட
எவரிடத்தில் போய் நிக்க
பாவி மக வாயிகிட்ட
ஒரு லட்சம்கோடி வாய்க்கலையே

தேர்தல் இப்ப வந்திருச்சி
வாய்க்கு வேல வந்திருச்சி
கோடி மேல கோடியெல்லாம்
வாய்க்கும் வேள வந்திருச்சி

வானம் முட்ட மேட போட்டு
கலர் கலரா லைட்டு போட்டு
காது கிழிய செட்டு போட்டு
டிவியில லைவ்வு போட்டு

கால் கடுக்க நிக்கனுமே
கையைத்தான் ஆட்டனுமே
தலைவர் பேர் சொல்லணுமே
வாய் வலிக்க பேசணுமே

கூட்டணிய சேக்கனுமே
பல பேர பாக்கணுமே
ஆளுக்கு இத்தனைன்னு
பேரத்த முடிக்கன்னுமே

என்னத்த சொல்லிகிட
பல சோலி பாக்கணுமே
கண்டவங்க மொகம் பாத்து
பல்லிளிச்சு பேசணுமே

ஊர் ஊரா போகணுமே
காருல தான் திரியனுமே
குப்பை கொட்டி விட்டாப்புல
நோட்டத்தான் கொட்டனுமே



எத்தன தான் வேல பாக்க
எப்படி நான் பாடு பட
சேதி வெளங்க வார வர
சங்கடம்தான் எங்க சொல்ல

ஜெயிச்சு தான் வந்துபுட்டா
ஜோராத்தான் இருந்திடலாம்
அட தோத்துத்தான் போச்சுதுன்னா
கொடநாட்டில் ஒறங்கிடலாம்





No comments: