Tuesday 12 April 2011

தேர்தல் ஸ்பெஷல் -2



கண் மூடி தெறக்கும் முன்னே
கனவு போல போச்சுதையா
பொசுக்குன்னு தான் நாள் குறிச்சு
பொது தேர்தல் வந்ததைய்யா

வெறப்பா தான் நின்னு நின்னு
காலு தேஞ்சு போச்சுதய்யா
கும்பிட்டு தான் நின்னதில
கை மரத்து போச்சுதையா


இளிச்சிக்கிட்டே இருந்ததில
வாய் கோணி இழுத்திருக்கு
கத்தி கத்தி பேசி பேசி
தொண்ட சுளுக்கி போய் கெடக்கு


சீட்டு கேட்டு போன போது
சிட்டாத்தான் நானிருந்தேன்
மனுதாக்கல் செய்யும் போதும்
தெம்பாத்தான் நானிருந்தேன்


கண்ணுல தான் வெரல விட்டு
கமிஷன் தண்ணி காட்டும் வர
மல்லுவேட்டி மைனர் போல
மொறப்பா தான் நானிருந்தேன்

அஞ்சு வருஷம் ஊருக்குள்ள
வாராம நானிருந்தேன்
கார் போகிற போக்கில தான்
தொகுதியையே பார்த்திருந்தேன்


காது குத்து வச்சப்போ
கட்சிகாரனின்னு மதிக்கலையே
ஆஸ்பத்திரியில இருந்தப்ப
அவசரமின்னு நெனைக்கலையே


வீடெல்லாம் வெள்ளத்தில
வெறகு போல மெதக்கையில
வீட்டுக்குள்ள ஏசி போட்டு
வெதுவெதுப்பா தான் இருந்தேன்


பதவியில பத்திரமா
பவுசாக இருந்த வர
ஆளுன்னு தெரியலையே
அவன் தேவைன்னு புரியலையே


இப்ப தெருக்குள்ள நான் போனா
ரோட்ட வெட்டி போட்டிருக்கான்
வோட்டு கேட்டு தான் போனா
வராதேன்னு போர்டு வைக்கான்


நோட்ட மட்டும் எடுத்து விட்டா
வோட்டு போட வருவானுன்னு
துட்ட எடுத்து போகையில
தேர்தல் கமிஷன் சீலு வைக்கான்


பணமுன்னு அழுவேன்னா
பதவின்னு அழுவேன்னா
என்னத்த நான் செய்ய
என் பாடு எங்க சொல்ல


கோடியாக கொட்டி வச்சு
சீட்டு வாங்கி வந்திருக்கேன்
தலைவர் பேரன் கொள்ளுப்பேரன்
வரை கால பிடிச்சி தொங்கியிருக்கேன்


நாலு பக்கம் நான் அழுது
வேட்பாளர் ஆகியிருக்கேன்
நெனைப்பு கெட்ட ஜனங்க கிட்ட
என்னன்னு சொல்லிடுவேன்


சொமையோட இருந்துபுட்டா
சொமக்குறது கஷ்டமில்ல
சொகுசாக இருந்துவிட்டா
சொமக்குறது சுலபமில்ல


பதவி பறி போச்சுதுன்னா
ஒரு நாயும் மதிக்காது
கட்சி ஆபிஸ் தரையிலதான்
குந்த இடம் கிடைக்காது


என் நெலம புரிஞ்சுக்கிட்டு
வோட்ட கொஞ்சம் போட்டிருங்க
செய்யாம போனதையெல்லாம்
பெரிய மனசு பண்ணி மறந்துருங்க


எம் எல் ஏ ஆகிபுட்டா
பெரிய மினிஸ்டர் ஆகிடுவேன்
தீராத ஒங்க கொற
அப்ப நானும் தீத்து வைப்பேன்


தாய்மாரே அய்யாக்களே
வோட்டிருக்கும் தொரமாரே
கண்தொறந்து பாருமையா
வோட்டத்தான் போடுமையா



10 comments:

அருள் said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

Yaathoramani.blogspot.com said...

மிக அருமை
திரும்பத் திரும்பப் படித்து ரசித்தேன்
ஒப்பாரி என்கிற தலைப்பு மிகப் பொறுத்தம்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

மிக்க நன்றி திரு .ரமணி.

சி.பி.செந்தில்குமார் said...

உங்க ஓட்டையே நீங்க இன்னும் போடலை.. (பிளாக்ல)

சி.பி.செந்தில்குமார் said...

>>>மொரப்பா தான் நானிருந்தேன்

மொறப்பா தான் நானிருந்தேன்

சி.பி.செந்தில்குமார் said...

உங்களுக்கு அங்கத நடை நல்லா வருது.. நகைச்சுவை+ கிராமிய எதார்த்த தமிழ் = பூங்குழலி

பூங்குழலி said...

//உங்க ஓட்டையே நீங்க இன்னும் போடலை.. (பிளாக்ல)//

போட்டாச்சு.
நமக்கு நாமே போட்டுக்கறதா ன்னு கொஞ்சம் தயக்கம் தான்.

//மொறப்பா தான் நானிருந்தேன் //
திருத்தியாச்சு .

பூங்குழலி said...

//உங்களுக்கு அங்கத நடை நல்லா வருது..
நகைச்சுவை+ கிராமிய எதார்த்த தமிழ் = பூங்குழலி//



அங்கத நடைன்னா என்னன்னு புரியலை .ரொம்ப பாராட்டியிருக்கீங்கன்னு மட்டும் புரியுது .ரொம்ப நன்றி செந்தில்குமார்

வலிப்போக்கன் said...

ஓட்டு நானும போடலைய்யா
எங்களோட ஒரு வாரம் தங்கியிருந்து
நிலமைய பாத்துவிட்டு பிறகு புலம்புமையா?

பூங்குழலி said...

//ஓட்டு நானும போடலைய்யா
எங்களோட ஒரு வாரம் தங்கியிருந்து
நிலமைய பாத்துவிட்டு பிறகு புலம்புமையா//

போட்டோ புடிக்க ஆளிருந்தா
ஒரு மணி தங்கிடுவேன்
டிவிக்காரன் கூட வந்தா
ஒரு நாளு பொறுத்திடுவேன்



வெளம்பரம் இல்லாம
வாரம் பூரா தங்க சொன்னா
பொழப்பு கேட்டு போகுமய்யா
புத்தி பெசகி போகுமய்யா

ஓட்ட போட போகலைன்னு
ஒப்புக்கு சொல்ல வேண்டாம்
இன்னிக்கு ஒரு நாளுக்கு எசமானே
ஓட்ட போட்டு வாருமையா