Tuesday 31 July 2012

என் வெளி








ஒரு அண்டமெங்கும் விரிந்திருக்கிறது
என் வெளி
நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம்
என ஐந்தும் சேர்த்து


சில காடுகள் மலைகள் சோலைகள் நீரோடைகள்
எனவும் பரவிக் கிடக்கிறது
என் வெளி
எங்கோ ஒரு பாலைவன மணல் பொட்டலும் சேர்த்து


தெளிந்த நீரோடைகளில்
நீந்திக் கிடக்கிறேன் நான்
காடுகள் தோறும் சுற்றித் திரிகிறேன்
சோலைகளில் மலர் கொய்து
சூட்டிக் களிக்கிறேன்
என் மனம் போல்


சிகரங்களில் ஏறி தொட்டுப் பார்க்கிறேன்
விண்ணைக்  கூட
நட்சத்திரங்களை பறித்து
ஓடைகளில் நனைக்கிறேன்
நீரெல்லாம் ஜொலிக்கின்றன
என் மீன்கள்



குயில்கள் கூவிக் கடக்கின்றன என்னை
மான்கள் கொஞ்சிப் போகின்றன
சில எருமைகளும் பாம்புகளும்
உரசிப் போகின்றன
அதனதன் விருப்பம் போல்



கீறும் சிறு முட்களும்
நாறும் சில குப்பைகளும்
குறுக்க  முடியாததாக இருக்கிறது என் வெளி
மலர்கள் சொரிந்து கிடக்கின்றன
என் பாதையெங்கும்
மகரந்த வாசம் ஏந்தி



எவரும்  தீண்ட  முடியாததாக
இருக்கிறது என் வெளி
எனதே எனதாக -
எவர்க்கும்  வசப்படாமல்
உலவித்  திரிகிறேன்-
நானோர்
வனதேவதையென