Wednesday 24 April 2013

தீண்டாமை

பல வருடங்களாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் பெண் .ஆதரவான கணவன் ,அழகான குழந்தை போதுமான வசதிகள் என நிறைவான வாழ்க்கை.
எல்லாம் இப்படி நலமாக போய்க் கொண்டிருக்கும் போதுதான் ,பரிசோதனையின் போது பிறப்புறுப்பில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது .முதலில் அழுது புலம்பினாலும் பின்னர் சிகிச்சைக்கு செல்ல ஒப்புக் கொண்டார் . புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தோம் .பரிசோதனைகள் முடிந்தபின்  ஒருமுறை வர சொல்லியிருந்தேன் .அதன்படியே வந்தார் .

"எல்லா டெஸ்ட்டும் எடுத்திட்டாங்க மேடம் .ஆரம்ப ஸ்டேஜ் தான் அதனால ரேடியோதெரபி மட்டும் போதுன்னு சொல்லியிருக்காங்க .அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க .ஒங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன் ,"என்று சொல்லிவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தார் .ஏற்கெனவே எச்.ஐ.வி இருக்க இப்போது  புற்றுநோயும் வந்துவிட்ட வருத்தத்தில்  போலும் என "அவங்க சொல்றபடி சரியா தொடர்ந்து செஞ்சுக்கோங்க .ஒண்ணும் பிரச்சனை வராது "என நான் சொல்லிமுடிக்க ஓவென்று அழத்துவங்கினார் .

"மேடம் ,அந்த ஹாஸ்பிட்டல்ல என்னைய ரொம்ப மோசமா நடத்திட்டாங்க மேடம் .எனக்கு ப்ளட் ஏத்தி தானே எச்.ஐ.வி வந்தது .என்னைய ஏதோ பிராஸ்டிட்யூட்ட  பாக்குற மாதிரி  பாக்குறாங்க .அங்க போங்கன்னு சொல்லிட்டு ஒரு நர்ஸ் என்னைய தள்ளிவிட்டாங்க .இங்க வந்து எங்க
உயிர வாங்குறீங்கன்னு காதுல விழற  மாதிரி  பேசுறாங்க .பெட்டுல ஷீட் கூட இல்லாம படுக்க வச்சாங்க .தொடக்கூட மாட்டேங்குறாங்க .
இத்தனை வருஷம் எனக்கு எச்.ஐ.வி இருக்குன்னு நான் வருத்தப்பட்டதே இல்ல மேடம் .ஆனா அங்க போனதிலிருந்து ஏன்டா  இந்த நோயோட உயிரோட இருக்கோம்ன்னு   தோணுது .ஆனா நா என் பொண்ணுக்காக எல்லாமே  பொருத்துக்குவேன்  மேடம்."

எச்.ஐ.வி என்பது பல வழிகளில் பரவும் நோய் .உடலுறவு வழியாக அது அதிகம் பரவுகிறது என்றாலும் நோயாளியாக வரும் ஒருவருக்கு தேவை சிகிச்சையும்  நலம் பெறுவோம் என்ற நம்பிக்கையுமே  ,சிகிச்சை அளிப்பவர்களுக்கு தேவை நோய் குறித்த  அறிதலும்  மனிதநேயமும் மட்டுமே