Sunday 8 November 2015

மழை








பல நாள் சென்று
இன்று வந்தது
மழை


சாரல்  போல
எங்கோ
சில துளிகள்
எனாமல்

வானம் சுருக்கி
இடி மின்னல்
என பெருமழையாய்

எனை காணவென
இன்று
வந்தது மழை

என்ன கொண்டு வந்தாய்
எனை காண என

வேறு எதை கொண்டு வரவென
தலை கோதி
கன்னமிழைத்து
எனை கொண்டு தந்தேன்
என்றது
மழை

Sunday 4 October 2015

ரிக்க்ஷா காசி


இந்த ப்ளாஷ் பேக்கின் காலம் சுமார் முப்பது வருடங்களுக்கு முந்தையது .அன்னைக்கெல்லாம் இன்றைய பாஷ்  அண்ணா நகர் சென்னைக்கு மிக அருகில்ன்னு விளம்பரப்படுத்தப்படும் சில ஏரியாக்கள் மாதிரியே தான் இருந்தது .கொல்லையில கருவேப்பிலை இல்லைன்னா அத வாங்க நீங்க அமிஞ்சிக்கரைக்கு தான்  போகணும் .


என்னோட ஸ்கூல் எங்க வீட்லேருந்து ஒரு  அஞ்சு தெரு தள்ளி இருந்திருக்கும் .எங்கப்பா அந்த காலத்தின் டுகாட்டியான லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் வச்சிருந்தாப்ல .ஆனா ஏதோ காரணத்தினால அதுல என்னையும் என் தம்பியையும் ஸ்கூல்ல தினம் டிராப் பண்றது கொஞ்சம் சிரமமா இருந்திருக்கும் போல .அன்னைக்கு பிரதான பள்ளி வாகனங்கள் பெரிய பிள்ளைகளுக்கு சைக்கிளும், சின்ன பிள்ளைகளுக்கு ரிக்க்ஷாவும் தான் .இன்னைக்கு மாதிரி பிள்ளைகள ஸ்கூல்ல விட்டுட்டு கேட்ட மூடி அசெம்பிளி முடியும் வரைக்கும் காம்பவுண்டு சுவருக்கிட்டேயே காத்திருந்து டாட்டா சொல்ல பெத்தவங்க வந்தா கூப்பிட்டு உங்க வேலய பாக்க நீங்க போங்க, உங்க பிள்ளைய நாங்க பாத்துக்கிறோம்ன்னு ஸ்கூல்ல கவுன்சின்லிங் பண்ணியிருப்பாங்க .

ஒருநாள் எங்கப்பா  ஒல்லியா ,சுமாரான   உயரமா ,சுமாரான வழுக்கை தலையோட (வயசு   என்னவோ முப்பதொட்டி தான் இருந்திருக்கும் )  ஒருத்தர கூட்டிட்டு வந்து ,"இவரு  ரிக்க்ஷா மாமா .நாளையிலேருந்து இவரு   வண்டியில தான் நீங்க ஸ்கூலுக்கு போகப்போறீங்க"ன்னு சொன்னாங்க தடால்ன்னு .  இதுல  ரிக்க்ஷா மாமா எனப்பட்டவர் பேரு காசி ,வண்டி எனப்பட்டது ஊதினால் உடைந்துவிடும் நிலைமையில் இருந்த ஒரு சைக்கிள் ரிக்க்ஷா .

காலயில ஸ்கூலுக்கு போகிற அவசரத்துல எந்த வம்புக்கும்  வழியிருக்காது .ஆனா சாயங்காலம் படு ஜாலிதான் .எப்படியும் அந்த ரிக்க்ஷவில பத்து பேராவது இருப்போம் .இதுல ட்ரைவர்  சீட்டுக்கும் அதோட டாப்புக்கும் டிமாண்ட் அதிகம் .முதல்வர்  போஸ்ட் மாதிரி அது பிரெஸ்டீஜ் போஸ்ட் .இதுக்கு தினம் ஒரு சண்டை  நடக்கும் .அதுல உக்காராட்டா நான் வண்டியிலேயே  ஏறமாட்டேன் .அதுக்கு பயந்தே ,பூங்குழலி கோச்சிக்கும்ன்னு யாரையும் உக்காரவிடமாட்டாப்ல .டாப்லவேற யாராவது உக்காந்துட்டா நாளைக்கு  உனக்குதான்ன்னு  சமரசம்  பேசி, நான் ட்ரைவர்  சீட்ல ஏற, வண்டி அன்னைக்கெல்லாம் பத்து நிமிஷம் லேட்டா தான் கெளம்பும் .இதனாலேயே சைக்கிள் ரிக்க்ஷா என்றாலும் ,ஓட்டிய நேரம் விட  காசி அத இழுத்த நேரம் தான் அதிகம்.




இதுல வண்டி வேற எப்பவும் அவசர சிகிச்சை பிரிவு அட்மிஷனுக்கு தயாராகிற  மாதிரியே இருக்கும் .எல்லாம் பேசி முடிச்சி இழுக்க ஆரம்பிக்கறப்ப பஞ்சராயிடும்  .அப்புறம்  பைய உள்ள போட்டுட்டு பெருசுங்க நடக்க சிறுசுங்க வண்டியிலேயே இருக்க காசி வண்டி  இழுப்பாப்ல .நாங்க ஜாலியா மழலை பட்டாளம் படத்தோட சூப்பர் ஹிட் பாட்டான "தள்ளு மாடல் வண்டியிது ..பாட்ட பாடிக்கிட்டே போவோம் .அதுலேயும் "எண்ணே வெல ஏறிப்போச்சு மாட்ட கொடுங்க" லைன்ன படுசத்தமா பாடுவோம்.ஆனா
எந்த சிக்கலும் இல்லாம வண்டி கெளம்பிருச்சுனா அன்னைக்கெல்லாம் எங்கள கைல பிடிக்க முடியாது ."ஓரம்போ ஓரம்போ காசி ரிக்க்ஷா  வருதுன்னு"  எங்க  அலப்பறையில மத்த ரிக்க்ஷாக்காரங்க காசிய பொறாமையா பாத்துட்டு போவாங்க .

கொஞ்ச நாள் போக இந்த சைக்கிள் ரிக்க்ஷா ஓல்ட் பேஷனாகி கூண்டு ரிக்க்ஷா வந்தது .புத்தம் புதுசா அப்டேட் ஆகி காசி ஒரு புளு கலர் கூண்டு ரிக்க்ஷா வாங்குனாப்புல. எங்களுக்கு புது ரிக்க்ஷா வந்தது பெருமைனாலும்  டாப் இல்லாதது வருத்தம் தான் .அதனால ட்ரைவர் சீட்ல நாங்க டர்ன் போட்டு உக்கார (என்னடா கொள்கை விலகலா இருக்கேன்னு நினைக்காதீங்க ...இப்பெல்லாம் நாங்க  பெருசாகி புரிந்துணர்வு  காரணமா இன்று நீ நாளை நான்னு ஒரு ஒப்பந்தத்துக்கு வந்துட்டோம் )காசி வழக்கம் போல இழுப்பாப்ல .


இப்படியே  சில ஆண்டு ஆகியிருக்கும்,ஏதோ ஒரு சண்டையில காசி   என்னைய முண்டக்கண்ணின்னு சொல்ல ,நான் பயங்கர கோபம் +ரோஷமாகி நான் இனிமேல் உன் வண்டியில ஏறமாட்டேன்னு சொல்லிட்டேன் .அப்புறம் ஏறவும் இல்ல .ஸ்கூலும் பக்கத்திலேயே இருந்ததால நடந்து போகிறது ரொம்ப கஷ்டமாவும் இல்ல .

இதுக்கிடையில காலம் மாறி மாருதி வேன் வந்து இந்த ரிக்க்ஷாக்கெல்லாம் எமனா போச்சு .அதோட அப்பப்ப  வாசல்ல பாத்து  விசாரிச்ச காசியும் காணாம போனார் .கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அப்பா காசிய பாத்ததா சொன்னாங்க ."இப்பெல்லாம் எங்க சார் பிள்ளைங்க ரிக்க்ஷால வருது .ஒண்ணும் தொழிலில்ல ..."






Monday 7 September 2015

ஆடும்வரை ஆட்டம்

அம்மா பெரிய மெஜாரிட்டியோட ஜெயிச்சு சி எம் ஆனதும் அப்புறம் சொத்து வழக்கு கேஸ்ல உள்ள போனதும் அப்புறம் ஒரு வழியா வெளிய வந்ததும்  தெரிஞ்ச சேதி .இந்த உள்ள வெளிய கேப்ல நம்ம தமிழ்நாடு தள்ளாடியதும் கூட நமக்கெல்லாம் தெரிஞ்ச மேட்டர் .

அம்மா மீண்டும் மக்கள் முதல்வர் போஸ்ட்லிருந்து   விலகி சாதாரண முதல்வர்  ( நன்றி ட்விட்டர் )ஆனதும் நிலைமை கொஞ்சம் சரியாகும்ன்னு எதிர்பார்த்திருந்தோம்ன்னா நாமெல்லாம் முட்டாள்  கூட்டம் .அம்மா வந்த நாளிலிருந்து  கொஞ்சம் டல்லா இருந்தது என்னவோ நிஜம் .அதோட ஒரு ஹைலைட் ரேஞ்சுக்கு பதவியேற்பு அப்புறம் இங்கே திறப்பு விழாக்கள் வீடியோ கான்பிரென்ஸிங்க் மூலம்  மட்டும்ங்கற கான்செப்ட் தொடங்கி   ஆக்டிவிட்டி லெவல் எப்பவும் விடவும்   குறைவு தான் .

ஆனாலும்  திமுகவுக்கு பெரிய ஆதரவு இல்லைங்கற மாதிரியும் எதிர்க்கட்சின்னு ஒண்ணு இல்லாத மாதிரியும் அம்மாவுக்கு சொற்ப அறுபது கோடிக்கு இப்படியான்னு அனுதாபம் இருக்கிற மாதிரி தெரிஞ்சதும் உண்மைதான் .

இதுக்கு நடுவுல சட்டசபை கூடாம இருந்ததும் வேற ஏதும் பெரிய திட்டங்கள்  (அல்லது ) திட்ட அறிவிப்புகள் இல்லாம போனதும் அப்புறம் நாமெல்லாம் ஆவலா எதிர்பார்த்த மந்திரிசபை மாற்றங்கள் இல்லாம இருந்ததும் அம்மாவுக்கு ஏதோ உடல் நலக்குறைவு ன்னு  புரளிகள் ? கெளப்பி விட்டதும் ...

சரி இதெல்லாம் முடிஞ்சு ..ஏதோ ஒன்றிரண்டு திட்டங்கள் அறிவிப்பு ...முடக்கப்பட்ட திட்டங்கள் வேகம் அதிகரிப்புன்னு ஆட்சின்னு  ஒண்ணு ஆரம்பிச்ச மாதிரி தெரிஞ்சுது ..தெரிஞ்சுதா ...

மதுவிலக்கு போராட்டம் பரபரப்பா போக ,அத அரசு  அலட்சியம் செய்த விஷயம் கொஞ்சம் கடுப்ப கெளப்புற நேரத்துல போய்  இந்த ஈவிகேஎஸ்  இளங்கோவன் வாய்க்கு வந்தத பேசி வம்புக்கு போக , ஆரம்பிச்சது  கெரகம் .மகளிர் அணி ஆபாச போராட்டம் -கொடும்பாவி எரிப்பு - கொலை மிரட்டல்ன்னு  இளங்கோவனே  கூச்சப்படுற அளவுக்கு அறப்போர்  நடத்தி ஆட்சியின் மூடுவிழாவுக்கு திறப்பு விழா நடத்தினாங்கன்னு தான் கட்சிக்காரங்க  மெச்சிக்கணும் ..இன்னைக்கு காலைல பார்த்தா வழியில இருக்கிற எல்லா பூங்காவிலேயும் அம்மா படத்த டப்பால ஒட்டி தொங்க விட்டிருக்காங்க ..அம்மா டப்பா திட்டம் போல ...

யோசிக்க யோசிக்க அதிமுகவோட முதல் ஆட்சி தான் நெனப்புக்கு  வருது ...


Sunday 16 August 2015

எல்லோருடனும் தனியாக

சதை  மூடுகிறது  எலும்பை
ஒரு மனதை போட்டு வைக்கிறார்கள்
அதனுள்
சிலநேரங்களில்
ஒரு ஆன்மாவையும்
பிறகு பெண்கள்
ஜாடிகளை
சுவற்றில்  மோதி உடைக்கிறார்கள்
ஆண்கள் அதிகமாக
குடிக்கிறார்கள் 

அந்த ஒருவரை 
கண்டுபிடிப்பதில்லை
எவரும்

ஆனால் தேடிக்கொண்டே இருக்கிறார்கள்
படுக்கைகளின்
உள்ளே வெளியே ஊர்ந்தபடி
சதை மூடுகிறது எலும்பை
சதை தேடுகிறது
இன்னமும் சதையென

வாய்ப்பே இல்லை
நாம்
ஒற்றை விதியில்
சிக்கியிருக்கிறோம்

அந்த ஒருவரை  எவரும்
கண்டுபிடிக்க முடிவதில்லை

நகர கழிவு கிடங்குகள் நிறைகின்றன
குப்பை கூளங்கள் நிறைகின்றன
பைத்தியக்கார விடுதிகள் நிறைகின்றன
மருத்துவமனைகள் நிறைகின்றன
கல்லறைகள் நிறைகின்றன


வேறு எதுவும் நிறைவதில்லை  

Alone With Everybody - 

by Charles Bukowski



the flesh covers the bone
and they put a mind
in there and
sometimes a soul,
and the women break
vases against the walls
and the men drink too
much
and nobody finds the
one
but keep
looking
crawling in and out
of beds.
flesh covers
the bone and the
flesh searches
for more than
flesh.

there's no chance
at all:
we are all trapped
by a singular
fate.

nobody ever finds
the one.

the city dumps fill
the junkyards fill
the madhouses fill
the hospitals fill
the graveyards fill

nothing else
fills.

Monday 10 August 2015

ஹான்ஸ்

சில வருடங்கள் சென்றே பார்க்கிறேன் இந்த சிறுவனை .
செக்கப் வந்தே சில வருடங்கள் ஆனது .இப்போது வயது 14ஆம் .வந்தவுடன் பேசவே இல்லை .கீழே பார்த்த படியே அமர்ந்திருக்கிறான் .ஒன்பதாம் வகுப்பு என்று சொன்னதை தவிர வேறு எதற்கும் பதிலில்லை .
 
"நல்லா படிக்கிறானா ?மாத்திரை ஒழுங்கா சாப்பிடுறானா ?"என்ற போது  அவன் அம்மா சொன்னார் "அவனையே கேளுங்க " .எதற்கும் பதில் இல்லை .திடீரென  அவன் அம்மா ,"என்னனு கேளுங்க,இவன் நல்லா இருக்கனும்ன்னு நான் மாத்திரை கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில வாங்கிட்டு இவனுக்கு காசு கொடுத்து வாங்கி கொடுக்கறேன் .இவன் மாத்திரை கரெக்டா போடுறதில்ல  ,அதோட ஹான்ஸ் வேற போடுறான் ."
ஒரு நிமிடம் என்ன சொல்வதென்றே புரியவில்லை .பதினான்கு வயது பள்ளி சிறுவன் அதிலும் படிப்பில் கெட்டிக்காரன்  ஹான்ஸ் போடுவானா ?ஒரு அம்மா இதை போய்  இட்டு கட்டி சொல்வதும் சாத்தியமில்லை .அப்போது உண்மையாகவே  இருக்க வேண்டும் .இவனுக்கு எங்கு கிடைத்திருக்கும் ?

"ஹான்ஸ் போடுறியா ?"இல்லை என்று தலையை மட்டும் ஆட்டினான் ." உங்கம்மா  சொல்றாங்க ?" அப்போதும் அதே தலை அசைவு மட்டுமே .அவன் அம்மாவை வெளியே அனுப்பிவிட்டு ,மெதுவாக நானும்  என் கவுன்சிலரும் பேச்சு கொடுத்தோம் .

"நல்லா படிக்கிறீயா "
ஆமா செகண்ட் ரேங்க் .
"நல்லா படிச்சா தானே ,நல்லா இருக்க முடியும் ?"
ஆமா
"ஒருத்தங்க செய்யறதா இன்னொருத்தங்க குறை சொல்லக்கூடாது தானே ?"
ஆமா
ஒடம்புக்கு நல்லதில்லாதத செய்யலாமா ? "
ஹூஹும்  
"Friends யாராவது ஏதாவது வாங்கி கொடுத்தாங்களா ?
ஆமா
"என்ன ?சாக்லெட்டா ?"
ஆமா
"எப்பவாது ஹான்ஸ் வாங்கி கொடுத்தாங்களா ?"
............
"யோசிச்சு சொல்லு "
ஆமா
"ஹான்ஸ் நல்லதா?"
.........
"அப்புறம் ?"
...இல்ல
"உனக்கே  தெரியும் தானே ?"
........
"எதையும் செய்யறதுக்கு முன்னால இது கரெக்டா தப்பானு நீயே நல்லா யோசிசிக்கோ .."
உம்
"எப்பயும் நேரா பாத்து பேசு .கீழ பாக்காத .எங்களுக்கே நீ தப்பு பண்ணியிருப்பியோன்னு தோணுது .."
சரி .....
"அம்மாவ கூப்பிடலாமா ?"
சரி
அவன் அம்மாவை அழைத்து இனிமேல் மாத்திரை ஒழுங்கா சாப்பிடுவானாம் ."அம்மாகிட்ட சொல்லு "-இனிமேல் சரியா
மாத்திர போடுறேன் .நல்லா  படிக்கிறேன் "



 

Monday 22 June 2015

இரவில்

நாம்  விலகியிருக்கிறோம்  ,
நம்மிடையே  நகரம் அமைதியாகிறது
அவள் தன்னை அமைதியாக்கிக் கொள்கிறாள்
நள்ளிரவு அவள் கண்களை பாரமாக்குவதால்
போக்குவரத்து  சிக்கல் தீர்ந்துவிட்டது 
காலியாக இருக்கின்றன கார்கள்  
ஐந்து தெருக்கள் நம்மை பிரிக்கின்றன
அவற்றின்  மேல் கிடக்கிறது நிலவொளி

ஓ !நீ உறங்குகிறாயா இல்லை கண்விழித்து கிடக்கிறாயா ,
என் காதலனே ?
உன் கனவுகளை என் காதலுக்கு திற
என் சொற்களுக்கு உன் இதயத்தை
என் எண்ணங்களை உனக்கு அனுப்புகிறேன்
நம்மிடையுள்ள காற்று  பொதிந்ததாக  இருக்கிறது
உன் ஜன்னலில் பறந்து மோதுகின்றன ,என் எண்ணங்கள்
ஒரு காட்டு பறவை கூட்டம்



At Night - Poem by Sara Teasdale


We are apart; the city grows quiet between us,
She hushes herself, for midnight makes heavy her eyes,
The tangle of traffic is ended, the cars are empty,
Five streets divide us, and on them the moonlight lies.

Oh are you asleep, or lying awake, my lover?
Open your dreams to my love and your heart to my words.
I send you my thoughts--the air between us is laden,
My thoughts fly in at your window, a flock of wild birds.

Friday 5 June 2015

என் ஒற்றை வரி ..

என்றோ தவற  விட்டேன்
கவிதை வரி ஒன்றை
ஒற்றை வரி தொட்டு
வழிந்தோடிய  கவிதையையும்

ஏதோ ஒரு நாளில்
மின்னல் போல் தோன்றி
காணாமலும் போனது
மின்னல் போலவே

எங்கோ கிடக்கத்தான் செய்யும்
என அலட்சியம் செய்ததில்
எங்கில்லாமலும்  போனது
இல்லை எங்கோ போனது

கவிதைக்கென மன்றாடியதில்
அவ்வரி வேண்டுமென
அடம்பிடிக்கிறது
பேனா

எவ்வரியோ வேண்டாம் 
அவ்வரிக்கான கவிதை
பொதிந்திருக்கிறது
மையுள் என

வேறொருவர் கவிதையில்
சேர்ந்திருக்கும் என்கிறேன்
கவிதை இங்கிருக்க
அங்ஙனம் சேராதெனவும் 

காத்திருக்கிறோம்
நானும் என் பேனாவும்
எழுதி வைத்த கவிதையில்
அந்த ஒற்றை வரி பொருத்த



Thursday 14 May 2015

உத்தமவில்லன்

நானும் என் பள்ளி தோழியும்   ரெண்டு நாளைக்கு முன்னால முடிவெடுத்து ஆன்லைன்ல டிக்கெட் எடுத்து இன்று உத்தமவில்லன் பாக்க போனோம்.போனோமா ..தியேட்டருல போனவுடனே ஆளுக்கொரு பாப்கார்ன் கோக் சகிதம் ரெடியாகிட்டோம் .அவ நேத்திலிருந்து ஒரே பொலம்பல் .எங்க வீட்ல ஒங்க ரெண்டு  பேருக்கும் வேற  படமே கெடைக்கலையான்னு திட்டுறாங்கன்னு .நல்லாவே இல்லையாமேன்னு ?நான் சொன்னேன் ,சரி விடு நாமளும் படத்த பாத்துட்டு நல்லா இல்லைன்னு சொல்லுவோம்ன்னு .

படம் பாத்தாச்சு .கமல் ரொம்பவே  மெனெக்கெட்டிருக்கார் ,எப்பவும் போலவே .ஆனா அது புல்லா  நமக்கு தெரியணும்ன்னு நெனச்சோ என்னவோ படம் நீளம் ,அதோட satire  நமக்கு புரியாதுன்னு நெனச்சாரோ என்னவோ ரொம்ப வெளக்கமா ...ரொம்...ப மெதுவா ...ஆனா அவர் பெரிய கோட்டைவிட்டது நாயகிகள் தேர்வுல .ஆன்ட்ரியா  அவ்வளவு முக்கிய ரோலுக்கு சுமார் effort ...சம்பந்தமில்லா காஸ்ட்யூம்ஸ் ...

படம் முழுக்க கமலோட  சொந்த வாழ்க்கை போலதான் இருக்கு ,எல்லாரும் சொன்ன மாதிரியே .அதிலும் நிறைய சுய பச்சாதாபம் தெரியுது ?கமல் கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடுறார் .எனக்கு ஏத்துக்கவே முடியல .அப்புறம் அந்த கடைசி சீன்ல ஒரு கூட்டமே ஹாஸ்பிடல் லாபியில படம் பாக்குறது ?சலங்கை ஒலி  சாயல் ?வேற வழியில்லையோ என்னவோ ?

அந்த உத்தமன் கதை ஒரு  பெரிய நடிகரோட swansong ன்னு சொல்றது  "ரிக்க்ஷாக்காரன் "எம்ஜிஆரோட பெஸ்ட் படம்ன்னு சொல்ற மாதிரி இருக்கு ..காமெடிய வேற ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்காங்க.இந்த கதைய இயக்குறதா நடிக்க கேபி ஏன் ஒத்துக்கிட்டார்ன்னு தெரியல... அந்த உத்தமன் குழுவே ஒரு பெருசுங்க க்ரூப்பா இருக்கு -சோவோட விவேகா பைன் ஆர்ட்ஸ் குழு மாதிரி ...

ஆனா படம் முழுக்க நிறைய  memorable moments ...

அந்த கடிதங்கள்
கமலுக்கு ட்யூமர்ன்னு தெரியும் போது கேபியோட ரியாக்சன்.
ஊர்வசி + எம் எஸ் பாஸ்கர்
பல வசனங்கள்
பல பாடல் வரிகள்
உத்தமன் intro ..

யாரும் கேக்கலைனாலும் என்னோட suggestions ...

அந்த  உத்தமன் கதையில கண்ண மூடிட்டு கத்திரிக்கோல வச்சிருக்கலாம் .
கமல் ஒரு படத்துக்கு ஒரு பாட்டு பாடுனா போதும் .
சில வசனம் ரேடியோ நாடகத்துக்கு எழுதின மாதிரி இருக்கு .
ஆன்ட்ரியா ரோலுக்கு ஸ்ரீதேவிய கேட்டிருக்கலாம் .
உத்தமன் படத்துக்காவது இளையராஜாவை  இசைய வைத்திருக்கலாம் .

என் தோழி சொன்னா ..எல்லாரும் சொன்ன  அளவுக்கு மோசமில்ல . ஆனா படம் முழுக்க சொந்த கதையாவே இருக்கே ,கமலுக்கு ஒடம்பு கிடம்பு சரியில்லையா ?



Monday 4 May 2015

இல்லாதவள்

என் பிரிய பேஷன்ட் இவள் .ரோஜாப்பூ போல் இருப்பாள் .சின்ன பிள்ளை போல தத்தி தத்தி  பேசுவாள் .தந்தை தாய் இல்லாமல் மாமாவால் வளர்க்கப்பட்டவள் .எப்போதும் ஒரு வித மனக்குழப்பத்திலேயே இருப்பாள் . எதற்கும் என்னிடம் தொலை பேசுவாள் .வாரத்தில் இருமுறையேனும் .

குழந்தை இல்லாமல் இருக்கவே அது குறித்து மிக வருத்தத்தில் இருந்தாள் .சுற்றாரின் இது குறித்த நச்சரிப்பு வேறு .இதெல்லாம் சேர்ந்து டிப்பிரெஷனாக (depression )  மாற மனநல மருத்துவரிடம் அனுப்பி அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டோம் .

இதனூடே இவள் கணவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது .அதே நேரத்தில் இவள் கருத்தரித்திருந்தாள் .கணவரின் உடல்நலம் குறித்து கவலையாய் இருந்தாலும் ரொம்ப சந்தோஷமாக இருந்தாள் .கணவரும் நன்றாக தேறினார் .2014 ,டிசம்பரில் அழகான பெண் குழந்தை பிறந்தது .குழந்தைக்கு  எச்.ஐ.வி  இருக்காதே என்று கேட்டுக்கொண்டே இருந்தாள் .குழந்தைக்கும் பரிசோதனை செய்யப்பட்டு நோய் இல்லையென உறுதி செய்யப்பட்டது .

பிரசவத்திற்கு பின்னர் கட்டிலிருந்த  டிப்பிரெஷன் மீண்டும் தலை துவக்க ஆரம்பித்தது .மருந்துகள் சாப்பிட்டபடியே இருந்தாள் .திடீரென போன் செய்வாள் .ஏதேனும் கேட்பாள் .பதில் கேட்டுக்கொண்டு அதன்படி செய்வாள் .
போனவாரம் சொந்த பணி காரணமாக லீவில் இருந்தேன் .

இன்று காலை இவள் கணவர் தொலை பேசியில் .குழந்தையை அடுத்தபடி பரிசோதனைக்கு எப்போது அழைத்து வரவேண்டும் என கேட்டார் ."அவள் என்ன செய்கிறாள் ?அவளையும் சேர்த்தே அடுத்த வாரம் கூட்டி வாருங்கள்  "என சொல்லவும் ,"அவள் போன வாரம் இறந்து போய்விட்டாள் "என்றார் கதறியபடி .ஐயோ என்று அலறியே விட்டேன் .

"நன்றாக  தான்  இருந்தாள் .என் அம்மா அக்காவிடம் சாதரணமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறாள் .திடீரென ரூமுக்குள் சென்று தூக்கு மாட்டிக்கொண்டாள் .எதற்கென்றே தெரியவில்லை என்றார் அழுதபடியே .சின்ன குழந்தையை விட்டுவிட்டு போய்விட்டாள் .குழந்தை வேண்டும் வேண்டும் என கேட்டுவிட்டு  இப்படி செய்துவிட்டாள் .
போன வாரம்  முழுவதும்  உங்களுக்கு பேச முயற்சித்துக்கொண்டே இருந்தாள் ...."


Monday 27 April 2015

பவானிசிங்

 ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராகலாமா என்பது குறித்து 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது, பவானிசிங் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. மேலும் மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை கிடையாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ள சூழ்நிலையில் நீதிபதி குமாரசாமி எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதென்று சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது.
 -தினமலர்  (http://www.dinamalar.com/news_detail.asp?id=1240217 )

இன்று பவானிசிங் நியமனம்  செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது .ஆனாலும் மறுவிசாரணை தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது .

1.நியமனமே தவறென்றால்  அவர் செய்த வாதங்கள் செல்லாது .அப்படி இருக்கும் பட்சத்தில் ,மறுவிசாரணை செய்வது தானே முறை ?

2.செல்லாத வாதங்கள் என்பதால் அன்பழகன் தரப்பு வாதங்களை கருத்தில் ஏற்பது என்ன நியாயம் ?அவர்கள்   எதிர்கட்சியினர் . மேலும் இந்த  வழக்கு வர காரணமானவர்கள் ?

3.இத்தனை காலம் தாமதமான பிறகு இன்னமும் ஓரிரு  மாதம் தாமதமானால் என்ன ?மறு விசாரணை நடத்துவது தானே சரியாக இருக்கும் ?

4.தாமதம் தாமதம் என்று சொல்பவர்கள் இத்தனை சட்ட ஓட்டைகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எடுத்து சொன்ன சட்ட நிபுணர்களை  ஏன் குறை சொல்லவில்லை ?

5. பழைய வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படுமாயின் மேல் முறையீட்டின் பலன் என்ன ?மேல் முறையீட்டின்அடிப்படையையே
இது கேள்வி குறியாக்குகிறது   ?



 



Wednesday 7 January 2015

சும்மாச்சுக்கும் ...

ப்ளாக் பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு .அப்புறம் எப்பவுமே ரொம்ப பீலிங்க்ஸ் மேட்டரே எழுதுற மாதிரி இருக்கேன்னு சும்மாச்சுக்கும் ஒரு  ஜாலி போஸ்ட் .

அம்மாவோட சொத்து குவிப்பு (சொத்து என்ன குப்பையா ,நம்ம மாநகராட்சி மாதிரி குவிக்க ?) வழக்கு மாரத்தான் மாதிரி நடந்து நடந்து ,அப்புறம் என்னவோ ஏதோ  திடுக்குன்னு வக்கீல் ,ஜட்ஜ்  எல்லாரும் கண்முழிச்சு சூடா  டீ  குடிச்சு   ,சுறுசுறுப்பாகி ஒரு வழியா தீர்ப்பு வந்தாச்சு .அம்மா குற்றவாளின்னு சொல்லி (ஒரு ரூவால  சொத்து  குவிக்க... விடுங்க  சேக்கனும்ன்னு நினைக்க கூட முடியாதுன்னு  சின்ன குழந்தைக்கு கூட ..சரி போகுது  ) தண்டனையும் கிடைச்சாச்சு .


தீர்ப்பு வந்தவுடனே எல்லா பத்திரிக்கையும் டிவியும்   ஜெயலலிதாவின்  அரசியல் வாழ்வு முடிந்தது .கட்சியில ரெண்டாம் கட்ட ?ஏன் ? தலைவர்களே கிடையாது ,கட்சி என்னாகும்ன்னு எல்லாம் கவலைப்பட்டுக்கிட்டு  இருந்த போது அதிமுகவில ஒருத்தர் மூளையில பலமான LED   பல்பு எரிஞ்சு (மோடி சொல்லியிருக்காருப்பா )  அவர் சட்டுன்னு கண்டுபிடிச்சது தான் "மக்கள் முதல்வர் " ஐடியா !சமீப கால அரசியல் இப்படியொரு பளிச் சை சந்தித்ததில்லைங்கறதால அவருக்கு  நம்மோட மனப்பூர்வ ஆசிகள் .மாநிலங்கள் அவை  வாய்க்கவும் வாழ்த்துகள் .


அதிமுகவில கூட சொந்தமா யோசிக்கிறாங்கப்பான்னு   நாம ஜெர்க் ஆன கேப்புல  ,  அட பதவியில இல்லாமையே முதல்வராக இருக்கலாம்ங்கறது மத்த கட்சிக்காரங்களுக்கு  பொளேருன்னு உரைக்க நாலாபக்கமும்  முதல்வர் பட்டம்  தான் .


ஏகப்பட்ட சீட்டு குலுக்கி போட்டு,  பேர் எடுத்து, தொண்டர்களே இல்லாத காங்கிரஸ் கட்சிக்கு (அங்க எல்லாரும் தலைவர் தானாம் -அவங்கவங்க கோஷ்டிக்கு ) வேண்டா வெறுப்பா மாநில தலைவரான  ஈவிகேஎஸ் இளங்கோவன் - "தொண்டர்களின் முதல்வர்  ".


நடந்து நடந்து ஓடா  தேஞ்சு ,ஓட்டு விழாட்டியும் கோச்சுக்காம டீக்கா  டீ ஷர்ட் போட்டுக்கிட்டு மதுவிலக்கு மாரத்தான்  ஓடின வைகோ -"தமிழர்களின் முதல்வர் "


எப்ப வந்த கோபம்னு தெரியல, ஏன் வந்த கோபம்னும்  தெரியல  ,திடீருன்னு காங்கிரஸ் தமிழக மக்களை ஏமாத்திருச்சின்னு (சாமி கனவுல வந்து  சொல்லியிருக்கும் போல ) மந்திரி பதவி போனதும் கண்டுபிடிச்சி , தமாகா -வெர்ஷன் 2 ஆரம்பிக்கிற வேலையில இருந்த  ஜி.கே .வாசன் -போஸ்டர் பலவற்றில் எஜமானர்  போஸில் இருந்தாலும் -   "ஏழைகளின் முதல்வர் "


பலமுறை முதல்வரா இருந்திட்டாலும் அது போரடிக்காம ,ஸ்டாலினை ஏதோ ஒரு சாக்கு சொல்லி ஓரம் கட்டிவிட்டு  (அவருக்கு ஒரு வருங்கால முதல்வர் பட்டம் வேண்டாம் ,போஸ்டர் கூட இல்ல  )2016 ,2021 ஏன் 2026லிலும் அதன் பின்னரும் கூட  திமுகவின் முதல்வர்  வேட்பாளராக இருக்க போகும் டாக்டர் கலைஞர் - "தமிழின முதல்வர் "


பேரறிஞர் அண்ணா ,எல்லாரும் இந்நாட்டு மன்னர்ன்னு  எந்த நேரத்துல சொன்னாரோ தெரியல அப்படி இப்படி எல்லாரும் இந்நாட்டு முதல்வர் ஆயிட்டாங்க . பெரிய கட்சிக்காரங்க  முதல் வெறும் பேப்பர்  கட்சிக்காரங்க  வரைக்கும்  .


இப்படி  ஊரே  பதவி  ஆசையில இருக்கிறப்ப ,இரண்டாம் முறை வலிய முதல்வர் பதவி தேடி வந்தும் ,கண்ணீரும் கம்பலையுமா  அத ஏத்துக்கிட்டு, அத விட முக்கியமா முன்னாள் முதல்வர்ன்னு மட்டும் இல்ல ,இந்நாள் முதல்வர்ன்னு கூட சொல்லிக்காம ,அதிமுக பொருளாளர்ன்னு பல நாள் ஜெயா டிவி சொல்லியும் கோச்சுக்காம ,வரலாறு காணாத தன்னடக்கத்தோட இருக்காரு அய்யா ஓபிஎஸ்-அட , நம்ம நிஜ முதல்வர்  !