Friday 23 April 2010

சந்தனமுல்லையின் அழைப்பிற்கிணங்க .....

நானும் கடவுளும்
-----------------------

எங்கே ஆரம்பிப்பது என்பதே கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது .
எங்கள் குடும்பம் திருநெல்வேலியில் ஆலடிப்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியலிங்கசாமி கோவிலின் பூசாரி குடும்பம்.ஆனாலும் என் அப்பா ,பெரியப்பாக்கள் இருவரும் இளமையிலேயே நாத்திகரானார்கள் .இன்னமும் என் அப்பாவுக்கு கோவிலின் விஷேஷங்களுக்கு வரும் பத்திரிக்கையில் பூ என்ற அடைமொழி சேர்த்தே எழுதப்பட்டிருக்கும் (பூசாரி என்பதன் சுருக்கமாம் ) .மிதமான ஒரு பக்தியே அந்நாளில் அம்மாவுக்கும் இருந்தது.இந்த சூழலில் பெரிய கடவுள் வழிபாடு என்று எதுவும் வீட்டில் நடந்ததில்லை .

கடவுளை எனக்கு தீவிரமாக அறிமுகப்படுத்தியது நான் படித்த ஜெஸ்ஸி மோசஸ் பள்ளி .இங்கு கிறிஸ்துவ பாடல்கள் ,பிராத்தனை என்று முழு வீச்சில் கடவுள் எனக்கு கடவுள் அறிமுகமானார் .அதனுடன் பைபிளைப் படிக்கும் scripture என்ற பாடத்திற்கு வருடா வருடம் பரிசு வழங்கப்படும் .அதுவும் நான் பள்ளி முடிக்கும் வரை எனக்கே தரப்பட்டதால் நான் பைபிளை தீவிரமாக படித்தேன் .இப்படி இருந்த போதும் ஒரு நாள் கூட என் ஆசிரியர்கள் யாரும் என்னிடம் மதமாற்றத்தை பற்றியோ ,உங்கள் கடவுள் கல்,களிமண் என்றோ பேசியதில்லை .காலை வந்ததும் ஒரு பாடல் ,சாப்பிடும் போது ஒன்று ,வீட்டிற்கு கிளம்பும் போது ஒன்று என ஒரு குதூகலமான மதமாக எனக்கு அறிமுகமாகியது கிறிஸ்துவம் .இன்றும் நான் சிறந்த பிராத்தனையாக கருதுவது ,நான் பள்ளியில் கற்றுக் கொண்ட ,"பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே /Our Father which art in heaven" என்ற பிராத்தனை தான் .

இது ஒரு பக்கம் இருந்தாலும் ,தினமும் காலையில் சாமி கும்பிட்டு திருநீறு பூசி ,அதனடியில் குங்குமம் வைத்து ( கண்ணாடி பார்த்து தான்) பள்ளிக்கு செல்வதும் கூட என் அன்றாட வழக்கமாக இருந்தது.இதை செய்தால் நல்லது என்ற நம்பிக்கையை விடவும் இதை செய்யாமல் விட்டுவிட்டால் ஏதேனும் தீமை ஆகி விடுமோ (ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால் என்று பெரியார்தாசன் பயந்து போனாரே அது போல ) என்ற ஒரு பயமே இதன் அடித்தளத்தில் இருந்தது .பூ தொடுத்து சாமி படத்துக்கு சூட்டுவது பிள்ளையாருக்கு அருகம்புல் வைப்பது என்று தினம் சாப்பிடுவதைப் போலவே ஒரு வழக்கமாக செய்து கொண்டிருந்தேன் .கல்லூரி வரை கடவுளைப் பற்றியோ எந்த ஒரு தீவிர சிந்தனையோ சந்தேகமோ எனக்கு வரவில்லை என்றே சொல்ல வேண்டும் .

கல்லூரி இறுதி ஆண்டில் திருமணம் ஆனது .என் மாமியார் வீட்டிலோ பக்தி கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது .இதில் சில காலம் திக்குமுக்காடிப் போன நான் ,மூச்சடைத்துப் போனேன் .ஒன்றிரண்டு சாமி படங்கள் மட்டுமே பார்த்து பழகிய எனக்கு இங்கே பூஜை அறையில் இருந்த கிட்டத்தட்ட இருபது படங்கள் ,வழிப்பாட்டு முறைகள் என்று எல்லாமே வித்தியாசமாக இருந்தது .இதனூடே ,முதல் ஆறு மாதங்களில் கர்ப்பமாகவில்லை என்பதற்காக என் மீது திணிக்கப்பட்ட பரிகாரங்களும் வேண்டுதல்களும் காரணமாக இதுவரை நான் பெரிதாக சிந்தித்திராத கடவுளை நான் வெறுக்க துவங்கினேன் .இதில் last straw வாக அமைந்தது ஒரு திருப்பதி விஜயம் .பணத்திற்கு பெருமாள் பணயம் இருப்பதாக தோன்றியது எனக்கு .பணமில்லாதவர்கள் தள்ளப்படுவதும் ஐம்பது ரூபாய் தருபவர்கள் இன்னும் சில நிமிடங்கள் தரிசிக்க அனுமதிக்கப்படுவதும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவர் லஞ்சமாக கொடுத்த பத்து ரூபாயை "சீ ,இவ்வளவு தானா ?" என்று ஒரு ஊழியர் தூக்கி எறிந்த போது கடவுள் எனக்கு அந்நியரானார் .
கோவில்களுக்கு செல்வதை குறைத்துக் கொண்டேன் .பரிகாரங்கள் செய்ய மறுத்தேன் .நானும் நாத்திகத்திற்கு மாறிவிட்டதாக எல்லோரும் பயந்து போனார்கள்.

என் அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த ஒரு உரையாடல் இது .என் தோழி ஒருத்தி திருப்பதியைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருந்தாள் .நான் வழக்கம் போலவே குறை சொல்லிக் கொண்டிருந்தேன் ."ஏன் இப்படி சொல்றீங்க ""என்று வருத்தமாக கேட்டாள் . "நீ ஏன் பெருமாள் தான் பெரிய கடவுள்ன்னு சொல்ற ?" என்று கேட்டேன் நான் ."அவரு தான் நாம கேட்டத கொடுக்குறாரு "என்றாள் ."பணம் கேட்பதும் பெறுவதும் தான் பக்தியா ?"என்று நான் கேட்டதிலிருந்து என்னிடம் கடவுள் பற்றியே பேசுவதில்லை அவள் .
அன்றிலிருந்து என் மருத்துவமனையிலும் எனக்கு நாத்திக பட்டம் கொடுக்கப்பட்டுவிட்டது .

பெண்ணாக இருந்து கொண்டு திருநீறு அணியாமல் விரதங்கள் இல்லாமல் கோவிலுக்கு செல்லாமல் இருப்பது என்னை சுற்றிய பல பேருக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது .என்னை சுற்றி இருப்பவர்கள் பலரும் என்னிடம் கடவுளைப் பற்றி பேசாதிருப்பதே நல்லது என்றே நினைக்கிறார்கள் .


இதைத் தொடர்ந்து சிந்தித்ததில் எனக்கு புரிந்தது இது தான் .
சகலத்தையும் இயக்கும் ஒரு சக்தி இருப்பதாகவே நம்புகிறேன் நான் .அந்த சக்தி நம்முள் இருக்கிறது .அதை உணர்த்து கொள்ள வேண்டுமே தவிர்த்து அதற்கென வெளி மரியாதைகள் செய்வதில் அர்த்தமில்லை . இதை உணரும் வரை எந்த கோவிலிலும் கடவுள் கிடைக்கப் போவதில்லை . இதை உணர்ந்து கொண்டால் எந்த கோவிலிலும் கடவுளை தேட வேண்டியதில்லை .

http://sandanamullai.blogspot.com/2010/04/blog-post_12.html
சாமி என்ற கோல்கேட்.....பாதுகாப்பு வளையம்!

நன்றி சந்தனமுல்லை .


No comments: