Wednesday 2 August 2023

தேவி

காலைல ரவுண்ட்ஸ் போகும் போது ஒரு பேஷண்டோட மனைவி என்கிட்ட தனியா பேசணும்னு கேட்டாங்க .அறைக்கு வரும் போது கூடவே வந்தாங்க , கணவரோட உடல்நலம் பத்தி சில விஷயம் கேட்டப்புறம் ,"இதுக்கு வரல,உங்க கிட்ட  வேற ஒண்ணு சொல்லணும் .நான் நாப்பது வருஷமா காலைல பூஜை பண்றேன் .அதோட மெடிட்டேஷனும்  பண்றேன் .தினம் நாலு மணி நேரம் .முடியற வரைக்கும் சாப்பிடவே மாட்டேன் .சுகர்  இருந்தா கூட இத எப்படி சமாளிக்கறனு என் சொந்தக்காரங்க எல்லாம் கேப்பாங்க .ஆனா நான் ஒருநாள் கூட விட்டதில்லை .அது என்னோட குருவோட அருள் .இப்ப நானே ஒரு குருவா இருக்கேன் .

ஏன் சொல்ல வந்தேன்னா ,ஒரு பட்டு புடவை .பூஜைல வச்சது .பிரசாதம் மாதிரி .  பிரசாதம் யார்கிட்ட கொடுக்கணும்னு மெடிட்டேஷன்ல  தெரியும் .நான் கண்மூடி பார்த்தப்ப உங்க முகம் தான் தெரிஞ்சது .என்ன டாக்டரம்மா முகம் தெரியுதேனு என் பிள்ளைங்கள நினைக்க பார்த்தேன் .ஹூஹும் .அப்பக்கூட உங்க முகம் தான் தெரிஞ்சது ,அவங்க முகம் தெரியவே இல்லை .அப்ப அத நான் உங்களுக்கு தான் கொடுக்கணும் .

அந்த புடவையை எடுத்துட்டு வரேன் .பத்திரமா பூஜைல வச்சுக்கோங்க .உங்களுக்கு நல்லதே நடக்கும் ."

எனக்கு இத கேட்டதும் ,சத்தியஜித் ரேயோட தேவி படம் நினைவுக்கு வந்தது .ஷர்மிளா தாகூரோட கணவர் கொல்கொத்தால படிச்சிட்டிருப்பாரு .இவங்க மாமனாருக்கு பணிவிடை செஞ்சுகிட்டு கிராமத்துல இருப்பாங்க .நல்லா கவனிச்சிக்கவே திடீர்னு மாமனாருக்கு கனவுல மருமக துர்க்கையா தெரிஞ்சிருவாங்க .அவரு உடனே இவங்க தான் தேவின்னு ,ஊருக்கே அம்மனாக்கிருவாரு .இதுல ஒரு கட்டத்துல வர போற ஆபத்தை புரிஞ்சிகிட்ட கணவர் அவங்கள "நீ தேவியில்லைனு தெரியறதுக்குள்ள வா ,நாம ஊரைவிட்டு போயிரலாம்"னு கூப்பிடறப்ப ஷர்மிளா தாகூர் சட்டுனு கேப்பாங்க  "நான் தேவியா இருந்தா ?"

மருத்துவதுறைல  ,இப்படி தேவியாகும் ஆபத்து அதிகம் .