Tuesday 1 July 2008

பாட்டி வீடு


எங்கள் ஊரில் இன்னொரு சிறப்பு இங்கிருக்கும் வீடுகள் .ஒவ்வொரு வீடும் ஒரே மாதிரியாக இருக்கும் .மூன்று வீடுகள் சேர்ந்தார் போல் இருக்கும் இதில்
நடு வீடு பாட்டி வீடு . நுழைந்த உடன் ஒரு மாட்டுத் தொழுவம் ,அடுத்தது அடுப்படி (பெண்களுக்கு முதல் உரிமை என்பது இங்கு நான் கண்ட உண்மை ).
அடுப்படி வாசலில் ஒரு வெற்றிடம் அதில் ஒரு பெரிய வேப்ப மரம் ,மர நிழலில்
ஒரு ஆட்டுரல் .இதை தாண்டி உள்ளே போனால் முற்றம் .இதில் சுவற்றில் எல்லாருடைய புகைப் படங்களும் இருக்கும் .என் பெரியப்பா ,பெரியம்மா ,அம்மா ,அப்பா ,அத்தையும் அவர் தோழியும் என அனைவரும் இளம் வயதில் புன்னகை பூத்திருப்பர் .
அடுத்த அறை படுக்கை அறை ,இதில் ஒரு பெரிய கட்டில் இருக்கும் .இதற்கு மெத்தை என் அப்பா வாங்கித் தந்ததாம் .இந்த அறையின் ஒரு ஓரத்தில் ஒரு மர ஏணி ஒன்று இருக்கும் .இதில் ஏறிப் போனால் ஒரு மரக் கதவு இருக்கும் .இது மச்சிக்கு செல்லும் வழி.வெளியிலிருந்தும் ஒரு படிக்கட்டு உண்டு .
அடுத்த அறையில் எனக்கு ரொம்ப பிடித்தது அதில் தொங்கும் உறி.ஒரு மர பெஞ்சில் தண்ணீர் குடங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் . அடுத்தது கூரையில்லாத குளியலறை .