Friday 5 February 2010

தவிப்பு

தம்பதியராக சிகிச்சைக்கு வருபவர்கள் தான் இவர்களும் .கணவர் ஏதோ தாக்குதலில் அடிபட, ரத்தம் ஏற்றியதில் எச்.ஐ.வி வந்தது .பல வருடங்கள் ஆன பின்னரும் இருவருக்கும் அதை ஏற்றுக் கொள்வது சிரமமாகவே இருக்கிறது .சொல்லும் போதெல்லாம் அழுகை வரும் .

போன வாரத்தில் வழக்கமான பரிசோதனைக்காக வந்திருந்தார்கள் .அப்போதும் ,"அடிப்பட்டப்ப செத்து போயிருவாருன்னு தாங்க நெனைச்சோம் .ஆனா அதில பொழைக்க வச்ச ஆண்டவன் இதில எங்கள மாட்டிவிட்டுட்டான் ,"என்று சொல்லி அழுதார் மனைவி .மேலும் ,"பசங்க கிட்ட எப்படி சொல்றதுன்னு யோசிச்சிகிட்டே இருந்தோம் .பெரியவன் இப்பதான் காலேஜ் சேர்ந்திருக்கான் .ரெண்டாவது பையன் ஸ்கூல் படிக்கிறான் .பெரியவன்கிட்ட போன வாரம் தான் சொன்னோம் .நாளைக்கு ஒடம்புக்கு ஏதாவது முடியலைன்னா அவனுக்கு தெரியனும் இல்லையா .அப்படியே இடிஞ்சி போயிட்டான் .எப்படிம்மா எப்படிம்மா ன்னு கேட்டுகிட்டே இருந்தான் .ரிபோர்டெல்லாம் காண்பிச்சோம் .சரிம்மா ஒடம்ப நல்லா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு விட்டுட்டான் .ஏத்துப்பான்னு நெனைக்கவே இல்ல .இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு ,"என்றும் சொன்னார் .

தனக்கு எச்.ஐ.வி இருக்கிறது என்று தெரிந்த அந்த ஒரு நொடியை விடவும் ,எவரும் அறியாமல் சிகிச்சைக்கு வந்து சென்ற அந்த சில நேரங்களை விடவும் மகனிடம் சொல்ல முடிவெடுத்த அந்த ஒரு நொடியை விடவும் ஏன் அவனிடம் சொன்ன அந்த ஒரு நொடியை விடவும் கூட அவன் பதிலுக்கென காத்திருந்த அந்த ஒரு நொடி வலி நிறைந்ததாக இருந்திருக்க வேண்டும் .


2 comments:

Anonymous said...

இப்போதே பாதி குணமாகியிருக்கும் என்றே நினைக்கிறேன்...
நன்று...

சந்தனமுல்லை said...

நினைத்துப் பார்க்கவே வலிக்கிறது! பகிர்வுக்கு நன்றி!