Friday 12 November 2010

அம்மாவின் சரவெடி

நேற்றைய ஹாட் நியூஸ் அம்மாவின் பேட்டி தான் ...காங்கிரசுக்கு ஆதரவு என்று திரியை அவர் கொளுத்தி போட, டைம்ஸ் நவ் அதை விதவிதமாக விவாதித்தது .

ராசாவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்பது தான் அவருடைய முக்கிய நிபந்தனையாம் .அமைச்சரவையில் கூட இடம் வேண்டாமாம் !ஆச்சரியம் தான் .காங்கிரசிற்கு வந்த வாழ்வு ....

பதினெட்டு எம் பிக்களின் ஆதரவை தானும் தர முடியுமாம் .ஆனாலும் "a bird in hand is worth two in a bush " இல்லையா ?

தேசிய அரசியலிலும் நாட்டின் நலன் மீதும் அவருக்குள்ள அக்கறையைப் பற்றியும் விரிவாகவே பேசினார் .பதிமூன்றே நாட்களில் வாஜ்பாயியின் அரசை கவிழ்த்த போது இந்த அக்கறையெல்லாம் எங்கிருந்ததோ தெரியவில்லை .

கடந்த காலத்தில் அவருக்கும் காங்கிரசிற்கும் நடந்த கசப்பான (இவருடன் உறவாடிய எல்லா கட்சியினருக்கும் ஏற்பட்ட மாதிரியே ஆன ) அனுபவங்களை மறந்துவிட வேண்டுகோள் விடுத்தார் .

ராசாவை அகற்ற தி மு க விற்கு விருப்பம் இருப்பதாக தெரியவில்லை .இத்தனை பெரிய ஊழலில் அவர் ஒருத்தர் மட்டுமே சம்பந்தப்பட்டிருக்க சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது .இவரை அகற்றினால் ,கட்சியிலும் ஏன் மத்தியிலும் உள்ள சில பெரிய தலைகள் சங்கடத்திற்கு உள்ளாகலாம் .காங்கிரசும் இதை பற்றி பெரிதாக கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை .ஒருவேளை பத்திரிக்கைகள் எழுதுவது போல பீஹார் தேர்தல் முடிவுகளை பொறுத்து இது அமையுமோ என்னவோ ?

ஊழல் குற்றச்சாட்டு இருக்கும் போது அவரை மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக்கியதே தவறு .அதிலும் அவரை இன்னமும் அமைச்சராக நீடிக்க விடுவது என்ன நியாயமோ ?அவரும் வெட்கமின்றி ஆணவமாக அமைச்சராக தொடர்கிறார் ?

இந்த பேட்டியின் டைமிங் ரொம்பவே சரியானது .ஆனால் இதனால் என்ன பலன் இருக்குமோ தெரியவில்லை .கட்சியின் மூத்த தலைவர்களே அவசரத்திற்கு பார்க்க முடியாத ,எவரும் எளிதில் தொடர்பு கொள்ள முடியாத ,கட்சி அலுவலகத்திற்கே மேள தாளத்தோடு வருகிற ஒரே தலைவர் செல்வி.ஜெயலலிதா தான் .இவர் நம்ப முடியாதவர் என்பதை இவரின் பல கடந்த கால நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றன .

அலங்காரமான மண் குதிரையை வேடிக்கை பார்க்கலாம் ,வழிபடலாம்,ஆனால் அதில் ஏறிக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கலாமா என்ன ?


2 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

அலங்காரமான மண் குதிரையை வேடிக்கை பார்க்கலாம் ,வழிபடலாம்,ஆனால் அதில் ஏறிக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கலாமா என்ன ?
//

சரியே..

ஆனால் அந்த மண் குதிரையின் அலங்காரம் கூட மறைந்து நாளாச்சு..

மக்களுக்கு தேவை அலங்காரமல்ல என்பதை இவர் புரியணும்,..

-----

நன்று பூங்குழலி.

சாந்தி

பூங்குழலி said...

ஆமாம் சாந்தி ,பதவியில் இல்லாத போது அரசியல் ஹாலிடே போய்விட்டு அலங்காரமாகவும் ஆரவாரமாகவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே இவர் தலைக் காட்டுகிறார் .

அடிப்படை நம்பகத்தன்மை கூட இல்லாமல் போய்விட்டது .கட்சியில் இருப்பவர்களுக்கு கூட எந்த தெளிவும் கிடைப்பதில்லை ..

தமிழகத்தின் ஒரே மாற்று கட்சியாக இவர் இருப்பது நம் துரதிருஷ்டமே ......