Thursday 17 February 2011

செய்திகள் வாசிப்பது ...

பிரதமரின் பரபரப்பு பேட்டி

உப்பு சப்பில்லாமல் போரடிக்கும் கல்லூரி லெக்சர் போல இருந்தது .நான் "நொண்டி வாத்து" பிரதமர் இல்லை என்ற தனது நம்பிக்கையையும் தான் பதவி காலம் முழுக்க பதவியில் எப்பாடுபட்டேனும் ஒட்டிக் கொண்டிருக்க முடிவு செய்திருப்பதையும் தவிர வேறு எதையும் தெளிவாக சொல்லாமல் முடித்துக் கொண்டார் பிரதமர் .
இதை உடனே எல்லா தொலைக்காட்சிகளும் அக்குவேறு
ஆணிவேறாக பிரித்து போட்டு விவாதித்தார்கள் .

ஜெயா ..ராஜா மீது பிரதமர் குற்றச்சாட்டு என்றது
கலைஞர் /சன் ..நான் சரியாக பார்க்கவில்லை ..அவர்கள் இந்த பேட்டியை அதிகம் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
என் டி டி வி ...இதில் பிரணாய் ராயும் விக்கிரமும் விவாதித்தார்கள் ..வழக்கமாக இத்தகைய விவாதங்களில் பங்கேற்கும் அரசியல் தலைவர்களை டைம்ஸ் நவ்வும் சி என் என் னும் ஆக்கிரமித்தது காரணமாக இருக்கலாம் .பிரதமர் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நன்றாக பதில் அளித்ததாகவும் (நம் நாட்டின் விலைவாசியும் பொருளாதாரமும் இருக்கும் நிலையில் நம் பிரதமர் ஒரு பொருளாதார மேதை என்பதே நமக்கு மறந்து போகிறது ),மற்ற கேள்விகளை சாமர்த்தியமாக கையாண்டதாகவும் பிரணாய் கூறினார் .அவர் போட்ட மார்க் பத்திற்கு மூன்றாக இருக்கலாம் .
டைம்ஸ் நவ்வில் அர்னப் ,காரசாரமாக விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தார் .நடிகர் திலகம் கோலோச்சிய காலத்து முகபாவங்களுடன் அவர் விவாதங்கள் நடத்தும் பாங்கே தனி ஸ்டைல் தான் .ஸ்பெக்டிரம் அலைக்கற்றையை குறைவான விலைக்கு விற்றதை மானியங்களுடன் ஒப்பிட்டு பிரதமர் பேசியது இங்கு கடுமையாக விவாதிக்கப்பட்டது .இதனுடன் வழக்கமான மசாலாக்கள் சேர்க்கப்பட்டன .
சி என் என் னிற்கு போனால் அங்கும் மனிஷ் திவாரியும் ,வினோத் மேத்தாவும் இருந்தனர் .ஆளை விடுங்க சாமி என்று டி வியை அணைத்துப் போட்டேன் .

கண்டனக் கவிதை :
சேனல் சேனலாக தாவிக் கொண்டிருக்கையில் ஜெயா டிவியில் ஏதோ வனவிலங்கு வார விழா கவிதை போன்ற ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்கள் .பன்னி ,யானை என்று மாறி மாறி வந்து கொண்டிருந்தது .அந்த கவிதையை முழுவதுமாக கேட்டிருந்தால் இவை இரண்டையும் பற்றி ஒரு கட்டுரையே எழுதியிருக்கலாம். கொஞ்ச நேரம் போன பின் தான் தெரிந்தது "தத்தாரி" என்று முரசொலியில் ஏதாவது வந்திருக்கும் போல ,அதற்கு பதிலடியாக இந்த கவிதை .கடைசியில் "........வாழும் பன்றிகளை விட ,யானையாய் இருப்பதே மேல் "என்று முடிந்தது கவிதை ?அதைவிட பெரிய ஆச்சரியம் இதை இயற்றிய கவிஞர் நமது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமாம் .ஓஹோ ! !(ஜாக்கிரதையா இருங்க ஓ பி, உங்களுக்கும் கலைமாமணி விருது கொடுத்திரப் போறாங்க )தேர்தல் நெருங்க இன்னமும் யார்யாரின் வெளியிடப்படாத திறமைகள் எல்லாம் வெளிவருமோ !

கனிமொழி கைது :
வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ,
ஸ்பெக்டிரம்-ராஜாவே காரணம் பிரதமர் பேட்டி ...
கனிமொழி கைது ...
திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
என்று ஒரு மாலை நாள் இதழின் விளம்பரம் ,கொஞ்சம் விஷமத்தனமாகவே சொல்லிக் கொண்டிருந்தது .ஆர்வமாக டிவியை பார்த்தால் ,மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டமாம் .டில்லியிலிருந்து சுஷ்மா ஸ்வராஜே வந்து போயாகி விட்டது .இவர் இப்போது தான் விழித்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய கிளம்பியிருக்கிறார் (இவரும் கொடநாடு போல எங்காவது போய் தூங்கிவிடுவாரோ ?)இந்த ஆர்ப்பாட்டமே ஒரு தமாஷ் என்றால் அதற்கு கைது அதைவிட பெரிய தமாஷ் . மகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார் ,அப்பா +அண்ணன் கைது செய்கிறார்கள் .புல்லரிக்கிறது ..ஆயிரம் தான் சொன்னாலும் மனுநீதி சோழர் பரம்பரை இல்லையா ?

இதை தவிரவும் அனில் அம்பானி நேற்று சி பி ஐ யின் முன் ஆஜராகி மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டது ,ரத்தன் டாட்டா தாத்தாவுக்கு அதாவது உதயநிதியின் தாத்தாவுக்கு எழுதியதாக சொல்லப்படும் கடிதம் ,தேவாஸ் -தங்கள் ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகும் ,அதை மதிக்கும் கடமை அரசிற்கு இருக்கிறது என்று சொன்னது ,இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வென்றது ,மற்றும் சிலபல விபத்துகள் +கொலைகள் பற்றிய செய்திகளும் நேற்றும் பேசப்பட்டன .


No comments: