Tuesday 12 June 2012

நதிக்கரையில்



இரவில் ,
சில நிலாக்கள் கொய்து
நகைக்கிறது நதி.

நிலாக்களை தேடி
நதியில் குதிக்கின்றன
விண்மீன்கள் .

விண்மீன்களை
ஒளித்தும் மறைத்தும்
விளையாடுகிறது நதி.

வானம் நீந்திகிடக்கிறது
நதியில்
எப்பொழுதும் .


விளையாட்டாய் மேனி நனைத்து சிறுவர்கள் 
அலசி செல்கிறார்கள் நதியில்
தத்தம் சிரிப்புகளை


சிரிப்புகளை   
சிதறவிட்டு
கலகலவென சிரிக்கிறது நதி .


காதலர்கள் ,
களவும் ஊடலும்
கரைத்து  நடக்கிறார்கள்  நதிக்கரையில்


அவர்கள் ரகசியம் உணர்ந்து
காலோரமாய்
கிசுகிசுக்கிறது நதி .


களைந்த இளமையை
சிலர் துழாவி ரசிக்கிறார்கள்  மணலில்.
பொக்கை  வாய்  திறந்து
பரிகாசம் செய்கிறது  நதி


நிழலும் நிஜமுமாக
வெவ்வேறு முகங்கள்  காட்டி
காலம் கடக்கிறது 
நதிக்கரையில்


எனினும்
சலனமின்றி
நதி ஓடிக் கொண்டே இருக்கிறது
ஒவ்வொரு துளியும் புதுத்துளியாக....



20 comments:

MARI The Great said...

அருமையான கவிதை, ரசித்து படித்தேன் சகோ..!

பூங்குழலி said...

பாராட்டுக்கு நன்றி சகோ ...

Gk Dinesh said...

Akka Arumai

பூங்குழலி said...

நன்றி தினேஷ்

Seeni said...

azhakiya kavithai!

Unknown said...

மிக மிக ரசித்து படித்தேன் ஒவ்வொரு வரியும் ஒரு கற்பனையை நம் கண் முன் விரிக்கிறது ...அருமையான படைப்பு உங்கள் பதிவுகள் மேலும் எதிர்பார்த்து காத்துக்கிடகிறேன்

Avargal Unmaigal said...

உங்களின் நதிக்கரையில் அம்ர்ந்து நீங்கள் சொன்ன கருத்துக்களை படித்து மகிழ்ந்தேன் ////ஒவ்வொரு துளியும் புதுத்துளியாக..../// என்று நீங்கள் சொல்லி முடித்தது போல உங்களின் ஒவ்வோரு கருத்து துளியும் புது புதுத்துளியாக வந்து விழுந்தன. வாழ்க வளமுடன்

விச்சு said...

நல்ல வர்ணனையுடன் கூடிய வரிகள். //ஒவ்வொரு துளியும் புதுத்துளியாக// ரசித்து எழுதியுள்ளீர்கள்.

சத்ரியன் said...

உயிர் தோற்றம் நீரில்.

நீரைச் சுற்றியே தேய்கிறது வாழ்வும்,உயிரும்.

சத்ரியன் said...

// "ஆலடி கண்ட கற்பகசித்தர் "//

நூலினைப் படிக்க ஆவல். என் வீட்டு முகவரி அனுப்பிட, உங்களின் மின்னஞ்சல் முகவரி வேண்டும். எனது மின்னஞ்சல் முகவரி: ramheartkannan@gmail.com

பால கணேஷ் said...

ஒவ்வொரு துளியும் புதுத் துளியாக... வெகு அருமை பூங்குழலி. உங்களின் கவிதை நதிக் கரையில் நானும் மனமகிழ்வுடன் நடந்தேன். மிக ரசித்தேன்.

முத்துப்பட்டன் கதை நீங்கள் எழுதியபோதே நான் மிக ரசித்தேன். ஆனால் மேலே நீங்கள் வெளியிட்டிரூக்கும் அறிவிப்பை பார்க்கத் தவறி விட்டேன். தம்பி சத்ரியனின் பதில் கண்டதும்தான் பார்த்தேன். ஸாரி. என் மின்மடல் முகவரி : bganesh55@gmail.com
புத்கக விரும்பியான நானும அவசியம் படிக்க விரும்புகிறேன்.

சசிகலா said...

நிச்சயம் ஒவ்வொரு வரியும் புத்துணர்ச்சி தருவதாக .அருமை .

பூங்குழலி said...

மிக்க நன்றி சீனி

பூங்குழலி said...

மனம் குளிர வைக்கும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கவிதைநாடன் .

பூங்குழலி said...

.நதியும் அதன் கரையும் பல சுவடுகளை தாங்கி காலங்கள் கடந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன . ரசிக்க நமக்கு தான் நேரமும் வரமும் இல்லை
.உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அவர்கள் உண்மைகள்

பூங்குழலி said...

வர்ணனைகளை ரசித்ததற்கு நன்றி விச்சு

பூங்குழலி said...

,நீரின்றி அமையாது உலகு. உண்மைதான் சத்ரியன் .வருகைக்கு நன்றி .புத்தகத்தை விரைவில் அனுப்பி வைக்கிறேன்

பூங்குழலி said...

என்னுடன் நடந்து என் கவிதையை ரசித்ததற்கு நன்றி கணேஷ் .இதற்கு மேல் ஒரு கவிதைக்கு பாராட்டு இருக்க முடியாது .மிக்க நன்றி .
முத்துப்பகடையின் கதையில் நீங்கள் கொண்ட ஆர்வத்திற்கும் நன்றி .மின்மடலில் முகவரி அனுப்புங்கள் ,அவசியம் புத்தகத்தை அனுப்பி வைக்கிறேன்

பூங்குழலி said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சசிகலா

பூங்குழலி said...

கவிதையை ரசித்து பாராட்டிய அன்பு நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி .நதிகளை துறந்து நதியில்லா நகரங்களுக்கு வந்த பின்னும் "நடந்தாய் வாழி காவேரி " என்று இளங்கோவடிகள் தொடங்கி நாம் வரையில், நதியும் அதன் கரையும் நம் மனதுக்கு நெருக்கமாகவே இருக்கின்றன .இந்த கவிதையின் முடிவில் வரும் "நதி ஓடிக் கொண்டே இருக்கிறது ,ஒவ்வொரு துளியும் புதுத்துளியாக ",என்னும் வரியே இந்த கவிதையின் தூண்டுகோலாக அமைந்தது .இது நான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்னால் குமுதத்தில் படித்த ஒரு கதையிலிருந்து இன்றளவும் என் மனதில் ஒட்டிக் கிடக்கிறது .கதையின் தலைப்பும் ஆசிரியரின் பெயரும் மறந்து போனதற்கு மன்னிப்பு கோருகிறேன் .இந்த கவிதை, அந்த வரியை தந்த அந்த எழுத்தாளருக்கு சமர்ப்பணம் .