Thursday, 28 August 2008

பாட்டி

பாட்டி வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்."என் அம்மா எனக்கு நாற்பது கழஞ்சு நகை போட்டாள்" என்று அவ்வப்போது பெருமையாக சொல்வார் .என் தாத்தாவும் வசதியானவர் தான் . ஆனால் பாட்டி தன் திருமணத்திற்கு பின் அறிந்தது கடனும் கடுமையான உழைப்பும் தான் .அத்தனை சங்கடங்கள் நடுவிலும் தன் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் என்பதில் தாத்தாவும் பாட்டியும் உறுதியாக இருந்தனர் .

இத்தனை சங்கடங்கள் சமாளித்த பாட்டிக்கு கொஞ்சம் இருமல் உண்டு .அடிக்கடி தலையெடுக்கும் இதற்கு பயந்து பாட்டி எப்போதும் ஒரு இருமல் மருந்தை வைத்திருப்பார் .அதை தினம், இருமல் உண்டோ இல்லையோ குடிக்கவும் செய்வார் .இது தீரும் முன் புதிதாக வாங்கிவிட வேண்டும் .இல்லையென்றால் கோபம் சற்று அதிகமாகவே வரும் பாட்டிக்கு .இந்த இருமல் மருந்திற்கு துணையாக அரிசியும் பனங் கற்கண்டும் கலந்து வைத்திருப்பார் .அதையும் அவ்வப்போது மென்று கொள்வார் .என் பாட்டியை நினைக்கும் போதெல்லாம் இந்த இரண்டும் எனக்கு தவறாமல் நினவுக்கு வரும் .



இன்னொரு கொஞ்சம் நகைச்சுவையான விஷயம் என்னவென்றால் எல்லா பேத்திகளின் பெயரையும் மாறி மாறிக் கூப்பிடுவார் .என்னை என் அத்தை மகள் கனிமொழி பெயரைச் சொல்லியும் அவளை என் அக்கா பெயரை சொல்லியும் இப்படி .இதனால் எங்களுக்குள் கொஞ்சம் சச்சரவு கூட வந்ததுண்டு .ஆனால் பாட்டி இது எதற்கும் அசந்ததில்லை. இது சம்பந்தமான எங்கள் அங்கலாய்ப்புகள் எதையும் அவர் பொருட்படுத்தியதே இல்லை .