Wednesday 7 April 2010

தீர்வு ?

கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளையும் தன் மகனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார் ஒரு பெண் .தங்கள் குடும்பத்தில் இப்படி ஒரு நோய் வந்துவிட்டதே என்பதே தாங்க முடியாததாக இருந்தது அவருக்கு .அதிலும் குழந்தைக்கு நோய் வரக்கூடும் என்பதை பற்றிய சந்தேகங்கள் வேறு அவரை வதைத்துக் கொண்டிருந்தன .இது போதாதென வீட்டில் மற்றவர்களுக்கு தொற்றி விடுமோ என்ற பயம் வேறு .இதற்கு பயந்து அவர்களை தனியே வைத்தால் அவர்களை கவனிக்க முடியாது போய் விடுமோ என்ற பயம் வேறு.அவர் பதட்டமும் பார்க்கவே சங்கடமாக இருந்தது .

சரியான சிகிச்சைகள் செய்தால் குழந்தைக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவே என்று சொன்ன போதும் அந்த ஒரு சதவீதத்தில் இந்த குழந்தை வந்துவிட்டால் ?என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அதனால் இந்த குழந்தை வேண்டாம் என்று கூறினார் .நாங்கள் சொன்னோம் ,அதை பற்றிய முடிவை உங்கள் மகனிடமும் மருமகளிடமும் விட்டுவிடுங்கள் .இதை பற்றி கலந்து பேசி முடிவு எடுப்பதாக சொன்னார் .

அடுத்ததாக ,இவரின் இன்னொரு பெரிய சந்தேகம் ,மாதவிடாய் காலங்களில் எப்படி இருக்க வேண்டும் என்பது .அந்த ரத்தப் போக்கினால் பிறருக்கு நோய் வரலாமா என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவர் சொன்னார் ,"எப்படியும் இவங்கள என்கூட தான் வச்சுக்கப் போறேன் .ஆனா மத்தவங்களையும் நா பாதுகாக்கணும் .இந்த பொண்ணு தூரம் ஆகிறப்ப மத்தவங்களுக்கு எதவும் வந்திரக்கூடாது .இனிமே இவளுக்கு கொழந்தையும் வேண்டாம் .அவங்க ஒடம்ப அவங்க பாத்துகிட்டா போதும் .அதனால கர்ப்பபைய எடுக்க ஏற்பாடு செஞ்சு தாங்க ,"என்றார் .எல்லாவற்றையும் விளக்கி சொல்லிவிட்டு சொன்னோம் ,இருபது வயது பெண்ணுக்கு கர்ப்பப்பையை அகற்றுவது அவளை கொல்வதற்கு சமம் ,நோயின் தன்மை பற்றி நன்கு புரிந்து கொள்ளுங்கள் .திருமணம் செய்து குடித்தனம் நடத்தும் இருவருக்கு தங்கள் எதிர்காலம் பற்றிய முடிவுகளை எடுக்கவும் தெரியும் என்று நம்புங்கள் ,என்று சொல்லி அனுப்பி வைத்தோம் .

இறுதி முடிவு இன்னமும் சொல்லாமல் சென்றிருக்கிறார்கள் .....காத்திருக்கிறோம்


2 comments:

சந்தனமுல்லை said...

:-((மிகுந்த வருத்தத்தை தருகிறது!

பூங்குழலி said...

ஆமாம் சந்தனமுல்லை .அறியாமை இவர்களை இப்படியெல்லாம் சிந்திக்க செய்கிறது