Tuesday 27 July 2010

விழிப்புணர்வு

சில சமயங்களில் நோயாளிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு மருத்துவர்களுக்கு இருப்பதில்லை .நேற்று நடந்தது இது .வெகு நாட்கள் கழித்து சிகிச்சைக்கென வந்திருந்தார் ஒருவர் .


முந்தைய வாரத்தில் பைக்கிலிருந்து விழுந்ததில் அடிப்பட்டு தையல் போடப்பட்டதாக சொன்னார் ."பைக்கில போயிட்டிருந்தப்ப பின்னாலிருந்து வண்டிக்காரன் தட்டிவிட்டுட்டான் .அங்கேயே ஒரு ஆஸ்பத்திரியில மூளைக்கு வயித்துக்கு எல்லாம் ஸ்கேன் எடுத்து பாத்துட்டாங்க .எல்லாமே நல்லா இருக்கு .உள்காயம் எதுவுமில்லன்னு சொல்லிட்டாங்க .பின் மண்டையில மட்டும் தையல் போட்டாங்க .

அதுல பாருங்க ,முதல்ல அடிப்பட்டு தலையில ரத்தம் வந்திச்சு .அப்ப வந்து பாத்த டாக்டர் கையில க்ளவுஸ் போடல .வெறுங் கையோட தான் பாத்தார் .தையல் போட்ட டாக்டர் க்ளவுஸ் போட்டிருந்தார் .எனக்கோ சங்கடமா போச்சு .ஆனா எச்.ஐ.வி ன்னு சொன்னா வெளிய அனுப்பிடுவாங்களோன்னு பயமா வேற இருந்திச்சு .சொல்லவும் முடியல .கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரினாலும் பரவாயில்ல .தனியார் தான் .எத்தனையோ மருந்து ,பஞ்சு எல்லாம் எழுதி கொடுத்தாங்க .அதோட ரெண்டு க்ளவுஸ் எழுதி கொடுத்திருந்தா வாங்கிக் கொடுத்திருக்க மாட்டோமா ?

நீங்களாச்சும் ஒங்க ஆஸ்பத்திரியிலிருந்து எல்லா டாக்டருக்கும் ஒரு லெட்டர் எழுதுங்களேன் .எந்த பேஷன்டா இருந்தாலும் க்ளவுஸ் போட்டு தான் பாக்கணும் ன்னு .ஏன்னா யாருக்கு நோய் இருக்கு அந்த அவசரத்துல பாக்க முடியுமா ?"


No comments: