Monday 16 May 2011

அன்புள்ள கலைஞருக்கு ,

அன்புள்ள கலைஞருக்கு ,

எல்லோரும் உங்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நானும் எழுதுவதற்காக வருந்துகிறேன் .ஆனாலும் விவரம் தெரிந்த நாள் முதலே தலைவர் என்றால் நீங்கள் மட்டும் என்று வரையறுக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் உங்களிடம் எனக்கு கொஞ்சம் உரிமை அதிகம் உண்டு தானே .

பூசாரி குடும்பத்தில் பிறந்தும் பேரறிஞர் அண்ணாவாலும் உங்களாலும் ஈர்க்கப்பட்டு மஞ்சள் துண்டு அணிந்த உங்களின் அபிமானியாக இன்று வரையிலும் நாத்திகராக இருப்பவர் என் அப்பா . ஜெயா டிவியில் பாடல் ஒளிபரப்பைக் கூட காண சகியாதவர்.நீங்கள் முனாகாவன்னா வாக இருந்து, கலைஞராகி, தமிழின தலைவர் மற்றும் வாயில் எச்சில் போல் வந்து கொண்டே இருக்கும் பட்டங்கள் அளவும் நீங்கள் பேர் பெற்றதை பார்த்து பெருமை கொண்டவர் .நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட காட்சிகளை கண்டு கதறி அழுதவர் . எம் ஜி ஆர் அசைக்க முடியாத மன்னாதி மன்னராக கோலோச்சிய என்னுடைய சிறு வயதில் கருணாநிதி என்று சொன்ன போது கலைஞர் என்று சொல் என்று கண்டிக்கப்பட்டவள் நான் .

புரட்சி தலைவர் மறைந்து (உங்களை தமிழின தலைவர் என்று சொல்லும் போது அவரை புரட்சி தலைவர் என்று சொல்லலாம் தானே ) நீங்கள் முதல்வரான போது தெருவெங்கும் உங்கள் பேரை சொல்லிக் கொண்டு ஊர்வலம் போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை எனக்கு நினைவிருக்கிறது ,ஆட்சி இல்லாத போதும் கட்சியை கட்டிக்காத்த உங்களின் ஆளுமையை பத்திரிக்கைகள் சிலாகித்து எழுதியதும் ...ஆனாலும் மாறி மாறி ஆட்சியில் இருந்தும் இன்று எதிர்கட்சியாக கூட இல்லாமால் போகுமாறு உங்களை கைவிட்டு எங்கு போனார்கள் ?அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் உங்களின் சாணக்கியம் தோற்றது ஏன் ?

அண்ணாவிற்கு நெருக்கமாக இருந்த சம்பத் விலக அவரிடத்தை பிடித்துக் கொண்டீர்கள் .பின்னர் உங்கள் மகன் முக முத்துவை எம் ஜி ஆரை போல் வேடம் புனைய செய்தீர்கள் .அது பலிக்காமல் போனது .இதில் மனக்கசப்புகள் அதிகமாக இதயக்கனியை வண்டு துளைத்துவிட்டதாக சொல்லி உங்களின் அருமை நண்பராக இருந்த எம் ஜி ஆரை வெளியேற்றினீர்கள் (இதற்கான உண்மை காரணத்தை என்றாவது மக்கள் அறியக் கூடும் ).அதன் பலனாக பல ஆண்டுகள் ஆட்சியை நெருங்க முடியாமல் அவதிப்பட்டீர்கள் . செத்தும் கொடுத்தான் சீதக்காதி ,அது போல் எம்ஜி ஆர் இறந்தும் உங்களுக்கு முதல்வர் பதவியை தந்திருக்கிறார் என்று காளிமுத்து சொன்னார் ..நிஜம் தானே .அன்றும் உங்களுக்கு உங்கள் குடும்பம் முக்கியமாகவும் உங்கள் மருமகன் மாறன் மட்டுமே அறிவாளியாகவும் இருந்தனர் .


சில ஆண்டுகள் சென்ற பின் ஸ்டாலினை முன்னேற்ற தடையாக இருந்த வைகோவை ஏதோ காரணங்கள் சொல்லி மதிமுகவை உண்டாக்கினீர்கள் .சரி அதன் பிறகு தான் அவருக்கு வழி காலியானதே என்று சும்மா இருக்கவில்லை .அவரை இன்றளவும் காக்க வைத்திருக்கிறீர்கள் (இளவரசர் சார்லசுக்கு அடுத்தப்படியாக பட்டத்திற்கு அதிக காலம் காத்திருக்கும் யுவராஜர் இவர்தான் ).பிறகு மெதுவாக மூக்கை உள்ளே நுழைத்த அழகிரியை வெளியே நிறுத்தாமல் அவரையும் அதிகார மையம் ஆக்கினீர்கள் .உங்கள் ஆரம்ப கால அரசியல் தோழர் தா கிருஷ்ணன் கொலையுண்ட போதேனும் அவரை அப்புறப்படுத்தி இருக்கலாம் .வழக்கை நீங்கள் கையாண்ட விதம் பார்த்து நாடே வாய் பிளந்து நின்றது .

சரி இதோடு முடிந்ததா ?தயாநிதி மாறன் ,கனிமொழி என்று இருவரையும் களமிறக்கினீர்கள்.(ஏனோ கயல்விழி மட்டும் இன்னமும் பதவியில்லாமல் இருக்கிறார் . )இவர்கள் எல்லாருக்கும் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை விட ஏதேனும் தகுதி இருக்கிறதா ?எஞ்சிவிட்ட உங்கள் மற்ற மகன் மகள் பேரன் பேத்தி எல்லோரையும் திரையுலகம் நோக்கி திருப்பிவிட்டீர்கள் .இதை நியாயப்படுத்த உங்கள் சக நண்பர்கள் மற்றும் ஜால்ராக்கள் பிள்ளைகளையும் வளர்க்க விட்டீர்கள் .யாரையும் யாரும் கேள்வி கேட்க முடியாது இல்லையா ?உங்கள் சாமர்த்தியம் ஊர் அறிந்தது தானே ?

இவற்றையெல்லாம் கூட நாங்கள் பொறுத்துக் கொண்டிருப்போம் நீங்கள் இதற்கான காரணங்களை பணிவோடு கூறியிருந்தால் ..ஆனால் கேட்ட போதெல்லாம் "என் குடும்பத்தினர் பிழைக்க கூடாதா ?என் மனைவி மலடாக இருக்க வேண்டுமா ?"என்ற ஆணவங்களை பதிலாக்கினீர்கள்.அலைகற்றை பற்றியும் ஈழம் பற்றியும் அதிகம் பேசியாகிவிட்டது .

இவை எல்லாம் ஆன பின்னும் கூட பணம் வாக்கு பெட்டிகளை நிரப்பும் என்ற வக்கிர கணக்கோடு காத்திருந்தீர்கள் .தட் வாஸ் தீ அன்கைண்டஸ்ட் கட் அப் ஆல்.இன்றளவும் ஓயாத உங்களின் உழைப்பும் ,தெவிட்டாத உங்களின் தமிழும் ,நகைச்சுவை மிளிரும் உங்களின் பேச்சும் என்றளவும் மறக்க முடியாதவை .மூன்று தலைமுறைக்கு தமிழ் கற்றுத் தந்த ஆசான் நீங்கள் .திமுக என்றாலே திரு . முக எனும் ஆளுமை நீங்கள் .

இனி என்றுமே நீங்கள் மீண்டும் முதல்வாராகும் வாய்ப்பு இல்லை என்றான அந்த மாலை பொழுதில் ,"மக்கள் எனக்கு நல்ல ஓய்வை தந்திருக்கிறார்கள் "என்று நீங்கள் புன்னகையோடு கூறி நகர்ந்த போது மனதின் ஒரு ஓரத்தில் ஒரு கீறல் தோன்றி மறைந்தது நிஜம் .

பணிவன்புடன் ,
பூங்குழலி


10 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

இளவரசர் சார்லசுக்கு அடுத்தப்படியாக பட்டத்திற்கு அதிக காலம் காத்திரக்கும் யுவராஜர் இவர்தான் )//

:)

திண்ணை எப்ப காலியாகும்?..

//இன்றளவும் ஓயாத உங்களின் உழைப்பும் ,தெவிட்டாத உங்களின் தமிழும் ,நகைச்சுவை மிளிரும் உங்களின் பேச்சும் என்றளவும் மறக்க முடியாதவை //

அதானே?..

புகழ், பாராட்டு மமதையில் உறங்கிவிட்டார்..:(

சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி விடுங்க .. மன்னர் குடும்பம்னா வாரிசு பிரச்ச்னை வரத்தான் செய்யும்

பூங்குழலி said...

புகழ், பாராட்டு மமதையில் உறங்கிவிட்டார்..:(


மமதையில் உறங்கினார் என்பதை விட எவர் மீதும் அவருக்கு அதிகாரம் இல்லாமல் போனது உண்மை ...முன்பே அரியணையை விட்டிருக்க வேண்டும்

பூங்குழலி said...

சரி சரி விடுங்க .. மன்னர் குடும்பம்னா வாரிசு பிரச்ச்னை வரத்தான் செய்யும்


அதானே

Anonymous said...

நெத்தியடி போஸ்ட்!

Anonymous said...

ஓயாத உங்களின் உழைப்பும் ,//
பெட்டியை நிரப்புவதே கடும் உழைப்பு!!

பூங்குழலி said...

நெத்தியடி போஸ்ட்!

ரொம்ப நன்றி சதீஷ்குமார்

பூங்குழலி said...

ஓயாத உங்களின் உழைப்பும் ,//
பெட்டியை நிரப்புவதே கடும் உழைப்பு!!


அப்படி சொல்ல முடியாது ..ஆரம்ப காலம் முதலே அவர் கடின உழைப்பாளி என்பதை அவரின் தீவிர விமர்சகர்கள் கூட மறுக்க முடியாது

ஆத்தூரான் said...

yaarukkaga kadinamaga ulaithaar????

பூங்குழலி said...

yaarukkaga kadinamaga ulaithaar????

ஒரு காலத்தில் கட்சிக்காகவும் தன்னுடைய முன்னேற்றத்திற்காகவும் கடினமாக உழைத்தார் .சமீபத்தில் தன்னுடைய குடும்பத்திற்காக ...என்ன காரணம் என்றாலும் அவர் கடின உழைப்பாளி என்ற உண்மை மறுக்க முடியாதது .