Wednesday 22 August 2012

என் கனவுகள்





உயிர் களைந்து
இமை போர்த்தி 
உறங்கப் போகிறேன்  நான்
மூடிய கண்களுக்குள்
விழிக்கின்றன என் கனவுகள்


உறக்கத்தின் திறவுகோலிட்டு
திறந்துவிட
சிறகுணர்ந்த  பறவைகள் போல்
சிறு செருக்குடன்
பறந்து  கலைகின்றன  திசைக்கொன்றாய்  ....


எங்கோ என்றோ  எதுவோ என
இனம் புரியாதவையாக
ஏந்தி வருகின்றன எதையெதையோ
வகை பிரிக்காமல்
கொட்டி சேர்க்கின்றன சலிப்பின்றி


இதமாக  தலைகோதும்
தளிர் கை போலொன்றும் 
நறுக்கென்று கிள்ளும்
நகமென ஒன்றும்
கண்சிமிட்டி ஜாடை காட்டி
சிரிக்கின்றன என் கனவுகள்


தொலைந்து போனவை சிலவும்
அகலாதிருப்பவை சிலவும்
அருவருப்பானவை அழகானவை என
என் விடியா நீள் இரவுகளின்
விளக்குகள் என் கனவுகள்


விடியலில்
செல்ல கோபம் காட்டி
அடைய மறுக்கின்றன என் கனவுகள்
மீண்டும் பறக்கவிருப்பதாக
பாவித்து பாசாங்கு செய்கின்றன



மெல்ல கையிலேந்தி
வாஞ்சையாய் தலைகோதி
சிறகுகள் மடக்கி
தொட்டில்கள் இட்டு
உறங்கச் செய்கிறேன்


உறங்கப் போனதும்
இமை அகற்றி
உயிர் உடுத்தி
கண்விழிக்கிறேன்
எப்பொழுதும்  போலவே ...






8 comments:

Seeni said...

haa haa!

inpa kanavu....

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை வரிகள்...

கனவு நனவாக வாழ்த்துக்கள்...

நன்றி...

பூங்குழலி said...

ஆமாம் சீனி ..நீள் உறக்கமும் கனவுகளும் இன்பம் தானே ...நன்றி

பூங்குழலி said...

எல்லா கனவுகள் நனவாக உகந்தவை அல்லவே ...நன்றி தனபாலன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான கனவுகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

விருதினை ஏற்று சிறப்பித்துள்ளதற்கு மிக்க நன்றி.

அன்புடன்
VGK

geevanathy said...

அழகான கனவுகள்.....அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்...

பூங்குழலி said...

மிக்க நன்றி வைகோ அய்யா ..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நீங்கள் பெருந்தன்மையுடன் அளித்த விருதுக்கும்

பூங்குழலி said...

ஓ !மிக்க நன்றி ஜீவன் ..நலம்தானே ?