Wednesday 24 April 2013

தீண்டாமை

பல வருடங்களாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் பெண் .ஆதரவான கணவன் ,அழகான குழந்தை போதுமான வசதிகள் என நிறைவான வாழ்க்கை.
எல்லாம் இப்படி நலமாக போய்க் கொண்டிருக்கும் போதுதான் ,பரிசோதனையின் போது பிறப்புறுப்பில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது .முதலில் அழுது புலம்பினாலும் பின்னர் சிகிச்சைக்கு செல்ல ஒப்புக் கொண்டார் . புற்றுநோய் சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தோம் .பரிசோதனைகள் முடிந்தபின்  ஒருமுறை வர சொல்லியிருந்தேன் .அதன்படியே வந்தார் .

"எல்லா டெஸ்ட்டும் எடுத்திட்டாங்க மேடம் .ஆரம்ப ஸ்டேஜ் தான் அதனால ரேடியோதெரபி மட்டும் போதுன்னு சொல்லியிருக்காங்க .அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம்ன்னு சொல்லியிருக்காங்க .ஒங்ககிட்ட சொல்லிட்டு போகலாம்ன்னு வந்தேன் ,"என்று சொல்லிவிட்டு பேசாமல் அமர்ந்திருந்தார் .ஏற்கெனவே எச்.ஐ.வி இருக்க இப்போது  புற்றுநோயும் வந்துவிட்ட வருத்தத்தில்  போலும் என "அவங்க சொல்றபடி சரியா தொடர்ந்து செஞ்சுக்கோங்க .ஒண்ணும் பிரச்சனை வராது "என நான் சொல்லிமுடிக்க ஓவென்று அழத்துவங்கினார் .

"மேடம் ,அந்த ஹாஸ்பிட்டல்ல என்னைய ரொம்ப மோசமா நடத்திட்டாங்க மேடம் .எனக்கு ப்ளட் ஏத்தி தானே எச்.ஐ.வி வந்தது .என்னைய ஏதோ பிராஸ்டிட்யூட்ட  பாக்குற மாதிரி  பாக்குறாங்க .அங்க போங்கன்னு சொல்லிட்டு ஒரு நர்ஸ் என்னைய தள்ளிவிட்டாங்க .இங்க வந்து எங்க
உயிர வாங்குறீங்கன்னு காதுல விழற  மாதிரி  பேசுறாங்க .பெட்டுல ஷீட் கூட இல்லாம படுக்க வச்சாங்க .தொடக்கூட மாட்டேங்குறாங்க .
இத்தனை வருஷம் எனக்கு எச்.ஐ.வி இருக்குன்னு நான் வருத்தப்பட்டதே இல்ல மேடம் .ஆனா அங்க போனதிலிருந்து ஏன்டா  இந்த நோயோட உயிரோட இருக்கோம்ன்னு   தோணுது .ஆனா நா என் பொண்ணுக்காக எல்லாமே  பொருத்துக்குவேன்  மேடம்."

எச்.ஐ.வி என்பது பல வழிகளில் பரவும் நோய் .உடலுறவு வழியாக அது அதிகம் பரவுகிறது என்றாலும் நோயாளியாக வரும் ஒருவருக்கு தேவை சிகிச்சையும்  நலம் பெறுவோம் என்ற நம்பிக்கையுமே  ,சிகிச்சை அளிப்பவர்களுக்கு தேவை நோய் குறித்த  அறிதலும்  மனிதநேயமும் மட்டுமே



 


13 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமையாக அனைவருக்கும்
தெளிவைத் தரும்படியாக
பதிவு செய்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

பூங்குழலி said...

நோயை பற்றி தெளிவின்மையே இத்தகைய பிரச்சனைகள் வருவதற்கு காரணமாகிறது -நன்றி ரமணி அவர்களே

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாமையே காரணம்...

அதுவும் மெத்த படித்தவர்களிடம்-எதுவும் சொல்வதற்கில்லை...

Avargal Unmaigal said...

HIV நோயாளியை தொடுவதால் அது பரவுவதில்லை என்று உங்களை போல உள்ள டாக்டர்கள் ஹாஸ்பிடலில் பணி புரியும் அனைத்து துறை பணியாளர்களுக்கும் அடிக்கடி மீட்டிங்க் போட்டு தெளிவு படுத்த வேண்டும் அது தொடர்பாக பல பதிவுகளையும் நீங்கள் இடலாமே... விழிப்புணர்வுக்காக

பால கணேஷ் said...

அடக்கடவுளே... பாமர மக்களுக்கு்த்தான் இந்த விஷயத்தில் விழிப்புணர்வு தேவை, பிரசாரம் வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஹாஸ்பிடல் ஊழியர்களே இப்படி விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் என்னத்தச் சொல்ல...! உங்களைப் போன்ற மருத்துவர்கள்தான் காப்பாற்றணும்!

மனோ சாமிநாதன் said...

மனித நேயமும் அக்கறையும் கருணையும் இருக்க வேண்டிய செவிலியர்களே இப்படி இருந்தால் நோயாளிகளை உடல் வேதனையைக்காட்டிலும் மன வேதனை அல்லவா கொன்று விடும்? யோசிக்க வைத்த பதிவு!

பூங்குழலி said...

அறியாமை தான் முக்கிய காரணம் என்றாலும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாததும் ஒரு காரணம் -நன்றி தனபாலன்

பூங்குழலி said...

தொடுவதால் பரவுவதில்லை என்பதை கூரையில் ஏறிக் கூவுவதை போல சொல்லியாகிவிட்டது .இன்னமும் இந்த நிலை தொடர்வது வேதனை தானே -நன்றி அவர்கள் உண்மைகள்

பூங்குழலி said...

நீங்கள் சொல்வது உண்மையே கணேஷ் -பாமரர் மக்கள் சொன்னால் ஏற்றுக் கொள்கிறார்கள் ,ஆனால் இந்த படித்தவர்களுக்கு நமக்கு தெரியும் என்ற எண்ணம் அறியாமையை தொடரச் செய்கிறது

பூங்குழலி said...

உண்மைதான் மனோ -மிக மிக விரக்தியடைய செய்தார்கள் அந்த பெண்ணை

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்.சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html?showComment=1390432773517#c4634842557672517303

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

துரை செல்வராஜூ said...

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள்.
http://blogintamil.blogspot.com/2014/01/blog-post_23.html

பூங்குழலி said...

மிக்க நன்றி துரை /ரூபன்