Tuesday 6 May 2008

ஆலடிப்பட்டி

இன்று என் தாத்தாவின் நினைவு நாள் .இந்நாளில் பல வருடங்கள் என் அப்பா விரதம் இருந்ததை நான் அறிந்ததுண்டு .என் தாத்தா பலவருட தவத்திற்கு பின்னால் தன் குடும்பத்தில் ஆண் மகனாகப் பிறந்தவர் . பூசாரிக் குடும்பத்தில் பிறந்ததால் 'வைத்தியலிங்கப் பூசாரி' என அழைக்கப் பெற்றவர் . இவர் படிப்பிற்கு ஐந்தாம் வகுப்பு மேல் அடுத்த ஊர் விடுதியில் இருக்க வேண்டியதிருந்ததால் ,அவர் அம்மா மகனை பிரிய முடியாது என்று முடிவெடுத்தார் .இதனால் என் தாத்தா ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த மேதை ஆனார் .
பலசரக்கு கடை ஒன்றை எங்கள் ஊரில் நடத்தி வந்த இவர் ,கம்பராமாயண கதை கூறியே வியாபாரம் செய்வார் என்று சொல்வார்கள் .கல்வியை விட உயர்ந்த செல்வம் எதுவுமில்லை என்பதை நன்குணர்ந்தவர் இவர் .இதே ராமாயணத்தில் பல்லாயிரம் பாடல்கள் இவருக்கு மனப்பாடமாகத் தெரியுமாம் .
அய்யா என்று தன் பிள்ளைகளால் பாசத்துடன்னும் வாஞ்சையுடனும் அழைக்கப் பட்டவர் . என் தாத்தாவின் கல்லறை எங்கள் ஊர் தோட்டத்தில் இன்றும் இருக்கிறது .

என் தாத்தாவைக் குறிப்பதாக கம்பராமாயணத்தில் இருந்து என் தந்தை குறிப்பிடும் பாடல் இது

"நந்தா விளக்கனைய நாயகனே- நானிலத்தோர்
தந்தாய் தனி அறத்தின் தாயே தயாநிலையே
எந்தாய் !இகல் வேந்தர் ஏரே இறந்தனையே
அந்தோ இனி வாய்மைக்கு யார் உளரே மற்று "