Wednesday 27 August 2008

பாட்டி


பாட்டியின் பெயர் பத்திரகாளி .கொஞ்சம் பயமுறுத்தும் பெயர் தான் .


காதில் தண்டட்டியும் ரவிக்கையில்லா சேலையுமாக பாரதிராஜா படங்களின் பாட்டி போலவே இருப்பார் .நல்ல சிவந்த நிறமாம் .இதில் என் பாட்டிக்கு ரொம்ப பெருமை .தன் நிறத்தை மங்கிக் காட்டக் கூடும் என்று தோன்றிய புடவைகளை கூட அவர் உடுத்தியதில்லை . நான் பார்த்த காலங்களில் சிவந்த நிறத்தை பல சுருக்கங்கள் மறைத்துவிட்டிருந்தது .அவர் கன்னத்தில் இருந்த மச்சமே, அவர் என் அண்டை வீட்டில் ஒருவருக்கு இருந்த மச்சத்தை பார்த்து விட்டு" எனக்கும் இதே போல் உண்டு " என்று சொல்லும் போது தான் தெரிந்தது .மச்சத்தை கூட காலம் சுருக்கங்களில் ஒளித்து விட்டிருந்தது .

அதிக உயரமில்லை பாட்டி .ஆனால் அழகாக இருந்தார் .கத்தையாக முடி, சாகும் வரை இருந்தது (அதில் குண்டு குண்டாக பேனும் கூட ) .அதை எண்ணெய் வைத்து சீவி நுனியில் கொண்டை போட்டிருப்பார்.

பாட்டியை நினைத்தவுடன் நினைவுக்கு வருவது அவருடைய தெளிவு .எந்த மருமகளிடமும் கெட்ட பெயர் வாங்காத சண்டை போடாத மாமியாராகவே இறுதி வரை இருந்தார் .

ஆம் .அமைதியான வைத்தியலிங்க தாத்தாவை வழிநடத்திய சாமர்த்தியமான
பத்திரகாளி இவர் .


1 comment:

su.sivaa said...

நல்ல மாறுபட்ட முயற்சி. ஆலடிப்பட்டியும் உங்கள் பாட்டியும் அழகான பதிவுகள்.