Monday 30 June 2008

குடும்ப வன்முறை ?

ஒரு புதிதாக மணமான இளம் பெண் .ரத்த பரிசோதனை செய்ததில் ரத்த சோகை
இருப்பது தெரிந்தது .உணவுகளால் மட்டுமே சரி பண்ணக் கூடிய அளவில் இருந்ததனால் என்னென்ன உட்கொண்டால் இந்த சோகை குறையும் என்று
சொல்லி அனுப்பினேன் .இரண்டு வாரம் சென்று மீண்டும் வர வேண்டும் என்றும் கூறினேன் .

இரண்டு வாரம் சென்றது ,மூன்று வாரம் சென்றது இந்தப் பெண் வரவில்லை ....
அவளை அறிந்தவர்களிடம் கேட்ட போது ஒரு பெண் சொன்னார் ,'அடப் போங்கம்மா !நீங்க பாட்டுக்கு பொறிகடலை சாப்பிடு ன்னு சொல்லி அனுப்பிட்டீங்க ,அந்தப் பிள்ளை ரெண்டு ரூவாய்க்கு கடலை வாங்கப் போக ,மாமியாக்காரி தெருவுலப் போட்டு அடிக்கிறா ,அழுதுக்கிட்டே
கெடந்தது பாவம் .'

மாமியார் கொடுமை என்று கூறினாலும் ,இதே மாமியார் இந்த பெண்ணை
பரிசோதனைக்கு அழைத்து வரவும் ,பரிசோதனைகள் செய்ய செலவழிக்கவும்
யோசிக்கவில்லை .அவள் பிரியப்பட்டதை அவளாகவே வாங்கி சாப்பிட்டாள் என்பதே அவரின் கோபம் ,அதை தன் மகன் வாங்கிக் கொடுத்தும் தான் .