Monday 8 September 2008

மக்கள் தொலைக்காட்சி

மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவினை சனிக்கிழமை மாலை நேரலையில் ஒளிபரப்பினார்கள் .மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தமிழ் தொலைக்காட்சியை நாமும் வாழ்த்துவோம் .

இன்றைய மற்ற பெருவாரியான தொலைக்காட்சிகளில் இது முற்றிலும் மாறுபாடானதே.

மற்றவை அனைத்திலும் திரைப்படங்களும் தொடர்களும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்க இந்த ஒரு தொலைக்காட்சி மட்டும் திரைப்படங்களை தவிர்த்து வருகிறது.
இன்னும் சிறப்பான ஒரு விஷயம் ..இங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழிலேயே
சிறிதும் ஆங்கில கலப்பின்றி நடத்தப்படுவது .
இன்று இந்த தொலைக்காட்சியின் வாயிலாக வழக்கில் உள்ள பல பிற மொழி
சொற்களுக்கு தமிழ் சொற்களை அறிய முடிந்திருக்கிறது .

ஒரு கட்சியினரால் நடத்தப் படும் தொலைக்காட்சி என்றாலும் விழாவில் அந்த சாயல் அதிகம் விழவில்லை .விழா நிகழ்ச்சிகளும் சிறப்பாக சிந்திக்கப் பட்டிருந்தன .


தமிழண்ணல் ,ராஜா ,மு.ரா, கவிஞர் சுப்பு ஆறுமுகம் ,நாஞ்சில் நாடன் ,பெரியார்தாசன் என்று பல நல்ல தமிழறிஞர்கள் மேடையில் .
நெல்லை தமிழ் ,குமரி தமிழ் ,கோவை தமிழ்,சென்னை தமிழ் என்று சிறப்பு உரைகள் . இவர்களோடு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ,பத்திரிகையாளர் பகவான் சிங் ,இயக்குனர் அமீர் ,சீமான் என துறை வல்லுனர்கள் வேறு.
அதி முக்கியமான செய்தி ஆளுக்கொரு நிகழ்ச்சி இவர்களுக்கு விமர்சனத்திற்கு
கொடுக்கப்பட்டிருந்தது .அதில் சிலர் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசவே செய்தார்கள் .

ஆட்டங்கள், தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள் என்று கொக்கரிக்கும் தொலைக்காட்சிகள் இடையே இதமான மாறுதல் .நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ,இறுதியில் பேசும் போது சொன்னார் ,"குறை கூற வாருங்கள் "என்று .ஒப்புக்கே சொல்லப்பட்டிருந்தாலும் உயர்வான வார்த்தைகள் .


இந்த விழாவில் என்னை கவர்ந்த சில நிகழ்வுகள் .
பிறரை அதிகம் ஏளனம் செய்யாமல் நடத்தப்பட்டது.
பேசியவர்கள் அனைவருமே தமிழேலேயே பேச முயன்றார்கள் .
உடல் நலம் கருதி சுப்பு ஆறுமுகம் அவர்களை அமர்ந்தே உரையாற்றச் சொன்னார்கள் .
கால விரயம் இன்றி விழாவினை நடத்தியது .
பேச்சாளர்கள் அனைவரையும் மணி அடித்து தங்கள் நேரத்துக்கு மிகாமல் பேசச் செய்தது .

மக்கள் தொலைக்காட்சி தான் ஏற்ற பாதையினின்று விலகாமல் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் !


4 comments:

ச.பிரேம்குமார் said...

மக்கள் தொலைக்காட்சி ஒரு சிறந்த தொலைக்காட்சியாக வளர்ந்து வருகிறது. அது மேன்மேலும் அப்படியே தொடர வாழ்த்துக்கள்

மற்ற தொலைக்காட்சிகளும் 'மக்கள்' தொலைக்காட்சியை கண்டாவது திருந்தட்டும்

Anonymous said...

தமிழ்நாட்டில் தமிழர்களுக்காக நடத்தப்படும் ஒரே தொலைக்காட்சி “மக்கள் தொலைக்காட்சி” மட்டுமே மக்கள் தொலைக்காட்சி மேன்மேலும் வளர வாழ்த்துவதும் அவர்களுக்கு ஊக்கமளிப்பதும் ஒவ்வொரு தமிழனின் கடமை

Unknown said...

100 சதவிகிதம் நீங்கள் சொல்வது சரி.

வடுவூர் குமார் said...

இவர்கள் தமிழ் உச்சரிப்பு பாரட்டப்படவேண்டிய ஒன்று.