Tuesday 11 November 2008

கல்விச்சாலை

சென்னை அண்ணாநகர் பெயின்ஸ் பள்ளி என் பள்ளிக்கூடம் .
என் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை நான் பயின்றது இங்கே தான் .

நான் முதல் வகுப்பு படிக்கும் போது ஆரம்பிக்கப்பட்டது இந்த பள்ளி .முதல் வகுப்பை கீழ்பாக்கம் பெயின்ஸ் பள்ளியில் படிக்க துவங்கியிருந்தேன் .இந்த பள்ளி ஆரம்பித்ததும் இங்கே மாற்றமானேன் .ஒரு சிறு வீட்டில் இரண்டு மாடிகளில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே ஆரம்பிக்கப்பட்டிருந்தது .என் தம்பி எல்.கே.ஜி ,நான் ஒன்றாம் வகுப்பு .வகுப்பு என்று சொல்வதை விடவும் அதை அறை என்றே சொல்ல வேண்டும் .நாங்கள் முப்பது பேர் இருந்திருப்போம் என்று எண்ணுகிறேன் .

அடுத்த ஆண்டே என்னோடு என் பள்ளியும் வளர்ந்தது .இப்போது அது இயங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அழகான கட்டடங்களுடன் பெரிதானோம் .இப்படியே ,நான் வளர என் பள்ளியும் வளர ....இன்று வரை என் வயதே என் பள்ளிக்கும் .

நான் எட்டாம் வகுப்பில் இருந்த போது ,என் பள்ளியின் நிறுவனர் ,"ஜெஸ்ஸி மோசஸ் "அவர்கள் மறைந்த போது அவர் பெயரே பள்ளிக்கும் சூட்டப் பட்டது .
நான் பள்ளிப் படிப்பை முடித்த போது என் பள்ளியும் அதன் முழு வளர்ச்சியை எட்டியிருந்தது .

பள்ளியிலேயே பொதுத் தேர்வு முதலில் எழுதியது நாங்கள் தான் .பத்தாம் வகுப்பு
பொதுத் தேர்வில் முதன்முதலில் நூறு விழுக்காடு தேர்வு பெற்றதும் நாங்கள் தான் .அது மட்டுமல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்பில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததற்காக தண்டனை வாங்கிய ஒரே வகுப்பும் என்னுடையது தான் .

இன்னும் பல சொல்லக் காத்திருக்கிறேன் ...


No comments: