Saturday 4 July 2009

பெண்ணுரிமை

பல நூறு வருஷமா தான்
பூட்டி தான் வச்சாங்க
கெணத்துக்குள்ள தவள போல
மாட்டி தானே வச்சாங்க

உரிமையெல்லாம் தந்து புட்டோம்
கரிசனந்தான் கொண்டு புட்டோம்
மேடையில ஏத்திபுட்டோம்ன்னு ....
சொந்த கத எதுக்கு இப்ப?

என்ன உரிம தந்தீக ?
எப்படித்தான் தந்தீக ?
எங்கிருந்து தந்தீக ?
எவருடையத தந்தீக ?

கல்லில மாவு அரைச்சோம்
கிரைண்டரில் அரைக்கும் உரிம தந்தீக
கிணத்தடியில் தொவச்சிக்கிட்டோம்
மிஷினில் தோய்க்கவும் உரிம தந்தீக

அட பிள்ள ஒன்னு பெத்துகிடத்தான்
பெரிய உரிம தந்தீக
பத்து மாசம் சொமந்தப்புறம்
ஒரு எழுத்துக்கு உரிம தந்தீக

பாரி வள்ளல் பரம்பர தான்
பேகனுக்கு ஒறவிவுக
வாரி கொடுத்தே வாழ்ந்து விட்ட
எம் .ஜி ஆரு போல் இவுக

வீட்டிலிருந்து வாசலுக்கு
போக உரிம தந்தீக
அட அப்புறமா வேலைக்கும்
போக உரிம தந்தீக

சம்பளத்த கொண்டு தந்தா
சேல வாங்க உரிம தந்தீக
மெச்சி தான் சொல்ல வேணும்
ரவிக்க வாங்கவும் உரிம தந்தீக

அள்ளி அள்ளி தந்தீக
அசத்தலா தந்தீக
சிம்மாசனம் மேலேறி
பகட்டா தான் தந்தீக

எத்தன நாள் சொன்னாலும்
சொல்லவே முடியாது
எப்படித்தான் சொன்னாலும்
வெளங்க சொல்ல இயலாது

சொந்த பெரும பேசிகிட்டு
அதிகாரம் ஏத்திக்கிட்டு
பெருசாக பேசாதீக
அதிலொண்ணும் பெருமையில்ல

ஒங்க வழி பாத்துகிட்டு
ஒழுங்க தான் போய்க்கிடுங்க
எங்க வழி நேராத்தான்
நாங்களே செஞ்சுக்குறோம்


No comments: